புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு மாவட்ட நிர்வாகம் தடை: வேளாங்கண்ணி கடற்கரையில் மக்கள் கூடுவதை தடுக்க போலீசார் கண்காணிப்பு பணி


புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு மாவட்ட நிர்வாகம் தடை: வேளாங்கண்ணி கடற்கரையில் மக்கள் கூடுவதை தடுக்க போலீசார் கண்காணிப்பு பணி
x
தினத்தந்தி 1 Jan 2021 4:34 AM GMT (Updated: 1 Jan 2021 4:34 AM GMT)

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதால் வேளாங்கண்ணி கடற்கரையில் மக்கள் கூடுவதை தடுக்க போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது.இது கீழை நாடுகளின் ‘லூர்து நகர்' என்றும் இந்தப் பேராலயம் அழைக்கப்படுகிறது. கிறிஸ்தவ ஆலயங்களில் ‘பசிலிக்கா' என்ற சிறப்பு அந்தஸ்து பெற்ற ஆலயமாக வேளாங்கண்ணி பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடைபெறுவது வழக்கம்.

ஆங்கில புத்தாண்டையொட்டி எப்பொழுதும் விண்மீன் ஆலயத்தில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெறும். ஆனால் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க இந்த ஆண்டு மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி சேவியர் திடல் மாநாட்டு பந்தலில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது.

போலீசார் கண்காணிப்பு பணி

அதனை தொடர்ந்து நேற்று மற்றும் இன்று (வெள்ளிக்கிழமை) ஆகிய இரண்டு நாட்களுக்கு கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறவும், கூட்டம் கூடவும் மாவட்ட நிர்வாகம் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வேளாங்கண்ணி கடற்கரையில் பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் இல்லாமல் கடற்கரை வெறிச்சோடி காணப்படுகிறது

மேலும் கடற்கரையில் மக்கள் கூடுவதை தடுக்க வேளாங்கண்ணி போலீசார் மற்றும் கடலோர காவல் படை போலீசார் கடற்கரையில் ரோந்து வாகனம் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story