வேப்பந்தட்டை அருகே கன மழையால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது


வேப்பந்தட்டை அருகே கன மழையால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
x
தினத்தந்தி 8 Jan 2021 12:25 AM GMT (Updated: 8 Jan 2021 12:25 AM GMT)

வேப்பந்தட்டை அருகே கன மழையால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பூலாம்பாடி பச்சைமலை பகுதியில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏற்கனவே நிறைந்துள்ள பூலாம்பாடி பொன்னேரிக்கு வந்தது. அந்த நீர் முழுவதும் ஏரியில் இருந்து வெளியேறியதால் அருகில் உள்ள சித்தேரி நிறைந்து பெரியம்மாபாளையம் ஏரிக்கு வெள்ள நீர் சென்றது. அப்போது பெரியம்மாபாளையம் ஏரிக்கு செல்லக்கூடிய வாய்க்காலில் தண்ணீர் வரத்து அதிகரித்து, பூலாம்பாடி அண்ணாநகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் பெரும்பாலான வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியே வர முடியாமல் சிரமப்பட்டனர். உடனடியாக பூலாம்பாடி பேரூராட்சி செயல் அதிகாரி ரமேஷ் மற்றும் பணியாளர்கள் அங்கு சென்று, பொக்லைன் எந்திரம் கொண்டு குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்திருந்த தண்ணீரை வெளியேற்றினர்.

மேலும் வாய்க்கால் பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்கு வெள்ள நீர் புகாத வகையில் மணல் மூட்டைகளை கொண்டு தடுப்பு ஏற்படுத்தினர். பின்னர் வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளில் இருந்த பொதுமக்கள் அங்கிருந்து அழைத்து செல்லப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு உணவு உள்ளிட்டவை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் செய்து கொடுக்கப்பட்டது.

Next Story