தைப்பூச விழாவை முன்னிட்டு விழுப்புரம் ஆதிபராசக்தி கோவிலில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


தைப்பூச விழாவை முன்னிட்டு விழுப்புரம் ஆதிபராசக்தி கோவிலில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 10 Jan 2021 5:41 AM GMT (Updated: 10 Jan 2021 5:41 AM GMT)

தைப்பூச விழாவை முன்னிட்டு விழுப்புரம் ஆதிபராசக்தி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் பிரசித்தி பெற்ற மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் உள்ளது. இந்த சக்தி பீடத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் சார்பில் கடந்த டிசம்பர் மாதம் 11-ந் தேதி முதல் செவ்வாடை பக்தர்கள் சக்தி மாலை அணிந்து இருமுடி ஏந்தி 7 நாட்கள் விரதமிருந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் நடைபெறும் சிறப்பு பூஜையில் பங்கேற்று வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தைப்பூச இருமுடி ஏந்திச்செல்லும் நிகழ்ச்சியையொட்டி நேற்று காலை விழுப்புரம் ஆதிபராசக்தி கோவிலில் பால், தயிர், நெய், பன்னீர், சந்தனம், விபூதி, குங்குமம் உள்ளிட்ட 21 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் இயற்கை சீற்றங்கள் தனியவும், கொரோனா போன்ற கொடிய நோய்களில் இருந்து உலக மக்கள் அனைவரும் விடுபட்டு நலம்பெற வேண்டியும் மாலையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் முக கவசம் அணிந்து கலந்துகொண்டு சமூக இடைவெளியை பின்பற்றி பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

1 லட்சத்து 35 ஆயிரம் பேர் தரிசனம்

நிகழ்ச்சியையொட்டி ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் விழுப்புரம்- கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தின் தலைவர் ஆர்.ஜெயபாலன், பக்தர்களுக்கு சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார். இதில் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீட நிர்வாகிகள் சீத்தாராமன், சண்முகம், சுப்பிரமணி, அஷ்டலட்சுமி, மனோன்மணி, கணபதி, விஜி, ஸ்ரீதர், ஜெயசசிதரன், கஸ்தூரி, செல்வி, சத்யா, சரவணன், டேனியல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து மாவட்ட தலைவர் ஜெயபாலன் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் இருந்து 2 லட்சம் பக்தர்கள் சக்தி மாலை அணிந்து இருமுடி ஏந்தி மேல்மருவத்தூர் கோவிலுக்கு ஆன்மிக பயணம் செய்து வருகின்றனர். அதுபோல் இந்த ஆண்டும் விழுப்புரம் மாவட்ட மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் 549 கிளை மன்றங்கள் மூலம் 2 லட்சம் பக்தர்கள், மேல்மருவத்தூர் கோவிலுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இதுவரை 1 லட்சத்து 35 ஆயிரம் பக்தர்கள் சக்தி மாலை அணிந்து இருமுடி ஏந்தி மேல்மருவத்தூர் கோவிலுக்கு ஆன்மிக பயணம் சென்றுள்ளனர். இன்னும் தொடர்ந்து வருகிற 28-ந் தேதி வரை பக்தர்கள், மேல்மருவத்தூர் செல்ல அனைத்து வசதிகளையும் செய்து வருகிறோம். இருமுடி செலுத்த வரும் பக்தர்கள் 5 நிமிடம் அல்லது 10 நிமிடம் வரை மவுனமாக இருந்து இருமுடி செலுத்திவிட்டு தொண்டர்களுக்கும், பக்தர்களுக்கும் உதவி செய்தல் போன்ற தொண்டுகளை செய்துவிட்டு அதன்பிறகு தியானம் கடைபிடிக்க வேண்டும். அதுபோல் இருமுடி செலுத்துவதற்கு முன்பாக 2 அல்லது 3 ஏழைகளின் இல்லங்களுக்கு சென்று அவர்களுக்கு அன்னதானம், ஆடைதானம் செய்ய வேண்டும். அதற்கும் மேலாக இருமுடி தொண்டு செய்ய வருபவர்களுக்கு அன்பு, அடக்கம், பக்தர்களிடம் பொறுமை, நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என்றார்.

Next Story