தா.பழூர் காவலர் குடியிருப்பில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை


தா.பழூர் காவலர் குடியிருப்பில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 11 Jan 2021 11:02 PM GMT (Updated: 11 Jan 2021 11:02 PM GMT)

தா.பழூர் காவலர் குடியிருப்பில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கு பணிச்சுமையால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தா.பழூர்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருபுவனம் நகரை சேர்ந்தவர் ஜெகதீசன்(வயது 53). இவர் கடந்த 1994-ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் போலீஸ்காரராக பணியில் சேர்ந்தார். பின்னர் ஏட்டாகவும், அதைத்தொடர்ந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராகவும் பதவி உயர்வு பெற்று, தற்போது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மதுவிலக்கு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.

இவருக்கு ராதா என்ற மனைவியும், காயத்ரி என்ற மகளும், லோகேஷ் பிரசாத் என்ற மகனும் உள்ளனர். இதில் காயத்ரி மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பும், லோகேஷ் பிரசாத் பள்ளியில் 7-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். ஜெகதீசன் தா.பழூர் போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

விடுப்பு எடுத்தார்

ராதாவின் தந்தை ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், பொங்கல் பண்டிகைையயொட்டி அவர் நினைவாக படையலிடும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ராதா, தனது மகள், மகனுடன் அவருடைய தந்தையின் ஊருக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஜெகதீசன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்நிலையில் ஜெகதீசன் நேற்று முன்தினம் விடுப்பு எடுத்தார்.

இதைத்தொடர்ந்து நேற்று காலை பணி தொடர்பாக அவரது அலுவலகத்தில் இருந்து ஜெகதீசனின் செல்போன் எண்ணுக்கு போலீசார் தொடர்பு கொண்டனர்.

ஆனால் ஜெகதீசன் செல்போனை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டும் அவர் அழைப்பை ஏற்காததால், சந்தேகம் அடைந்த போலீசார் ஜெகதீசன் குடியிருந்த வீட்டிற்கு எதிர் வீட்டில் குடியிருக்கும் தா.பழூர் போலீஸ் நிலைய போலீஸ்காரர் மொய்சனுக்கு தகவல் தெரிவித்து, ஜெகதீசனை தொடர்பு கொள்ள முயன்றனர்.

சேலையால் தூக்குப்போட்டு...

அதன்படி மொய்சன், ஜெகதீசன் வீட்டுக்கு சென்று கதவை தட்டினார். அப்போது கதவு தாழிடப்படாமல் திறந்த நிலையில் இருந்தது.

வீட்டின் வெளியே இருந்து மொய்சன் பலமுறை அழைத்தும் வீட்டிற்குள் இருந்து பதில் வராததால், வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் உள்ள ஒரு அறையில் மின் விசிறியில் புடவையால் தூக்குப்போட்டநிலையில் ஜெகதீசன் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது பற்றி தா.பழூர் போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் காவலர் குடியிருப்புக்கு உடனடியாக விரைந்து வந்தனர்.

காரணம் என்ன?

மேலும் கூடுதல் சூப்பிரண்டு திருமேனி, ஜெயங்கொண்டம் துணை சூப்பிரண்டு தேவராஜ் தலைமையிலான போலீசார் அங்கு வந்து,, ஜெகதீசனின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு ெசய்து, ஜெகதீசனின் தற்கொலைக்கு குடும்பத்தகராறு காரணமா? அல்லது காவல்துறையில் பணிச்சுமையால் மன அழுத்தம் காரணமா? அல்லது கள்ளச்சந்தையில் மது விற்கும் சமூக விரோதிகள் காரணமா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவலர் குடியிருப்பில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story