4,721 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் - கலெக்டர் தொடங்கி வைத்தார்


4,721 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் - கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 15 Jan 2021 10:48 AM GMT (Updated: 15 Jan 2021 10:48 AM GMT)

நீலகிரி மாவட்டத்தில் 4,721 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் பணியை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் 2020-21-ம் கல்வி ஆண்டிற்கான விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி, ஊட்டி பெத்லகேம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி பிளஸ்-1 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசு அனைத்து மாணவர்களும் கல்வி பயில வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக வீட்டில் இருந்து பள்ளி செல்வதற்கு ஏதுவாக மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் 52 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-1 பயிலும் 2 ஆயிரத்து 56 மாணவர்கள், 2 ஆயிரத்து 665 மாணவிகள் என மொத்தம் 4 ஆயிரத்து 721 பேருக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளது. விலையில்லா மடிக்கணினி உள்ளிட்ட திட்டங்களை தெரிந்துகொண்டு பயன்படுத்தி கொள்ள வேண்டும். நீலகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இது வருங்காலங்களில் நீலகிரியை சேர்ந்த மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் சேர்ந்து மருத்துவ படிப்பினை படிக்க உதவியாக இருக்கும்.

அரசின் திட்டங்கள் எதிர்கால சமுதாயத்திற்கான மூலதனம். அதன் நம்பிக்கையை மாணவர்கள் காப்பாற்ற வேண்டும். நீலகிரியில் அதிகம் பேர் டாக்டர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக வேண்டும். உயர்ந்த நிலையை அடைந்து சமுதாயத்துக்கும், நாட்டுக்கும் சேவை புரிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து பிளஸ்-1 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் பணி நடந்து வருகிறது. நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story