புதுக்கோட்டையில் 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது சரக்கு வேன், மின்மாற்றி சேதம்


புதுக்கோட்டையில் 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது சரக்கு வேன், மின்மாற்றி சேதம்
x
தினத்தந்தி 19 Jan 2021 1:06 AM GMT (Updated: 19 Jan 2021 1:06 AM GMT)

புதுக்கோட்டையில் 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் சரக்கு வேன், மின்மாற்றி சேதமடைந்தது.

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டையில் கீழ ராஜ வீதி, தெற்கும் 2-ம் வீதி சந்திப்பில் தனியாருக்கு சொந்தமான பழமையான கட்டிடம் ஒன்று இருந்தது. இந்த கட்டிடத்தின் ஒரு பகுதி நேற்று அதிகாலை திடீரென இடிந்து விழுந்தது. அந்த இடத்தில் நிறுத்தியிருந்த சரக்கு வேன் மீதும் கட்டிட இடிபாடுகள் விழுந்தன. மேலும் அதன் அருகில் இருந்த மின்மாற்றியும் சேதமடைந்தன.

இந்த சம்பவத்தால் அந்தபகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கட்டிடம் இடிந்து விழுந்தது குறித்து தகவல் அறிந்ததும் வருவாய்த்துறை அதிகாரிகளும், டவுன் போலீசாரும், கட்டிட உரிமையாளரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் தொடர்ந்து ஆபத்தான நிலையில் மீதி கட்டிடங்கள் இருந்தன. இதனால் ஏதேனும் விபரீதம் ஏற்படும் முன்பு அதனையும் அப்புறப்படுத்த உரிமையாளருக்கு தெரிவித்தனர். அதன்படி பொக்லைன் எந்திரம் மூலம் கட்டிடத்தின் மற்ற பகுதியும் இடிக்கப்பட்டன.

போக்குவரத்து நிறுத்தம்

இடிந்து விழுந்த இந்த கட்டிடம் பயன்பாடில்லாமல் இருந்துள்ளது. இதனால் பெரும் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. கட்டிடத்தின் மற்ற பகுதியை இடித்த போது கீழ ராஜ வீதியில் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டன. பொதுமக்கள் அந்த வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டன. கட்டி இடிபாடுகளில் இருந்து சரக்கு வேன் அகற்றப்பட்டன. கட்டிட இடிப்பு பணியின் போது அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தன.

Next Story