வேடசந்தூர் அருகே கார் கவிழ்ந்து குழந்தை பலி அக்காள், தம்பி உள்பட 3 பேர் படுகாயம்


வேடசந்தூர் அருகே கார் கவிழ்ந்து குழந்தை பலி அக்காள், தம்பி உள்பட 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 19 Jan 2021 5:43 AM GMT (Updated: 19 Jan 2021 5:43 AM GMT)

வேடசந்தூர் அருகே கார் கவிழ்ந்து குழந்தை பலியானது. அக்காள், தம்பி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

வேடசந்தூர், 

திண்டுக்கல்லை சேர்ந்தவர் விஜயராஜ். இவர் திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி அஸ்மிதா (வயது25) தனது ஒரு வயது ஆண் குழந்தையான சேசாந்துடன் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று இருந்தார். பின்னர் நேற்று காலை அஸ்மிதா, குழந்தை சேசாந்த், அஸ்மிதாவின் தம்பி அமிர்தியாஸ் (20) ஆகியோர் திண்டுக்கல்லுக்கு காரில் புறப்பட்டு வந்தனர். காரை சேந்தமங்கலத்தை சேர்ந்த தமிழரசன் (40) என்பவர் ஓட்டினார்.

கரூர்-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் வேடசந்தூர் அருகே உள்ள கருக்காம்பட்டி பிரிவு அருகே கார் வேகமாக வந்துகொண்டிருந்தது. அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

குழந்தை சாவு

இதில் அஸ்மிதா, அமிர்தியாஸ், குழந்தை சேசாந்த் மற்றும் டிரைவர் தமிழரசன் ஆகியோர் படுகாயத்துடன் காருக்குள் உயிருக்கு போராடினர்.

அப்போது அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் 4 பேரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சிறிது நேரத்திலேயே குழந்தை சேசாந்த் பரிதாபமாக இறந்தது. படுகாயம் அடைந்த அஸ்மிதா உள்பட 3 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

விபத்து குறித்து வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்ைத ஏற்படுத்தியது.

Next Story