ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
x
தினத்தந்தி 20 Jan 2021 12:27 AM GMT (Updated: 20 Jan 2021 12:31 AM GMT)

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேரோட்ட திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஸ்ரீரங்கம்,

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேரோட்ட திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி மூலஸ்தானத்தில் இருந்து நேற்று காலை 4.30 மணிக்கு கொடியேற்ற மண்டபத்துக்கு நம்பெருமாள் வந்தடைந்தார். பின்னர் காலை 5.30 மணிமுதல் காலை 6.15 மணிக்குள் தனுர்லக்னத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் காலை 7.15 மணிக்கு நம்பெருமாள் அங்கிருந்து கண்ணாடி அறையை சென்றடைந்தார். நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மாலை 6.30 மணிக்கு திருச்சிவிகையில் புறப்பட்டு உள் திருவீதிகளான 4 உத்திரை வீதிகளிலும் வலம் வந்து இரவு 8.15 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைந்தார்.

அங்கிருந்து இரவு 8.45-க்கு புறப்பட்டு யாகசாலையில் திருமஞ்சனம் கண்டருளிய பின்னர் இன்று (புதன்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கண்ணாடி அறை சென்றடைகிறார். இரண்டாம் நாளான இன்று (புதன்கிழமை) காலை 5.30 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்படுகிறார். மாலை 6.30 மணிக்கு ஹம்ச வாகனத்தில் நம்பெருமாள் புறப்பாடு நடைபெறுகிறது.

திருவிழாவின் 3-ம் நாளான நாளை (வியாழக்கிழமை) காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும், 22-ந்தேதி காலை இரட்டை பிரபை வாகனத்திலும், மாலை கருட வாகனத்திலும், 23-ந் தேதி காலை சேஷவாகனத்திலும், மாலை ஹனுமந்த வாகனத்திலும், 24-ந் தேதி காலை கற்பக விருட்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் வீதியுலா வருகிறார். 25-ந் தேதி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல் அளவை கண்டருளிகிறார். 26-ந் தேதி மாலை குதிரை வாகனத்தில் நம்பெருமாள் வையாளி கண்டருளுகிறார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைத்தேரோட்டம் 27-ந் தேதி காலை நடைபெறுகிறது. அன்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அதிகாலை 3.45 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபத்திற்கு அதிகாலை 4.30 மணிக்கு வருகிறார். காலை 4.45 மணிமுதல் காலை 5.15 மணிவரை ரதரோஹணம் (தனுர்லக்னத்தில்) நிகழ்ச்சி நடைபெறுகிறது. அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின், காலை 6 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. தேர் நான்கு உத்திரை வீதிகளில் வலம் வந்து பின்னர் நிலையை அடைகிறது.

28-ந் தேதி சப்தாவரணம் நிகழ்ச்சி நடக்கிறது. நிறைவு நாளான 29-ந் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி உள்வீதிகளில் வலம் வருகிறார். அத்துடன் தெப்பத்திருவிழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், இணை ஆணையர் அசோக்குமார் (கூடுதல்பொறுப்பு) , உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Next Story