பொன்னாக்குடி அருகே நான்கு வழிச்சாலையில் பாலம் அமைக்க வேண்டும் கலெக்டரிடம், காங்கிரசார் மனு


பொன்னாக்குடி அருகே நான்கு வழிச்சாலையில் பாலம் அமைக்க வேண்டும் கலெக்டரிடம், காங்கிரசார் மனு
x
தினத்தந்தி 20 Jan 2021 7:34 PM GMT (Updated: 20 Jan 2021 7:34 PM GMT)

வெள்ளநீர் கால்வாய் திட்டத்தில் பொன்னாக்குடி அருகே நான்கு வழிச்சாலையில் பாலம் அமைக்க வேண்டும் என்று காங்கிரசார் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

நெல்லை,

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தலைமையில் மாவட்ட செயலாளர் குமார், ஓ.பி.சி.பிரிவு மாவட்ட தலைவர் ஜான் கென்னடி, ராதாபுரம் தலைவர் ஜார்ஜ், வர்த்தக காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ராஜகோபால், கிங்ஸ்டன், விமலா தருவை செல்வகுமார் உள்ளிட்ட காங்கிரசார் கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் விஷ்ணுவை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

தாமிரபரணி ஆற்றில் வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீரை நாங்குநேரி, ராதாபுரம், சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்காக வெள்ள நீர் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் 85 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. இன்னும் ஒரு மாத காலத்திற்குள் இத்திட்டம் நிறைவடைந்து தண்ணீர் வந்து சேரும் என்று ஆளுங்கட்சி தரப்பில் அந்த பகுதி மக்களுக்கு தகவல் சொல்லப்பட்டு வருகிறது.

தற்போது காங்கிரஸ் சார்பில் முறைப்படி கால்வாய் திட்டத்தை பார்வையிட்டபோது கால்வாய் திட்டத்தில் பெரும் பகுதி நிறைவடைந்துள்ளது.

காத்திருப்பு போராட்டம்

மிக முக்கியமாக பொன்னாக்குடி பகுதியில் நான்கு வழிச்சாலையில் நீர் கடந்து செல்வதற்கான வாய்க்கால் பாலமும், அதற்கு மேற்கு பகுதியில் நீர் கடந்து செல்லும் ரெயில் வழித்தடத்திலும் வாய்க்கால் பாலம் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. இந்த பணிகள் தொடங்குவதற்கான எந்தவித அறிகுறியும் தென்படவில்லை.

எனவே உடனே வாய்க்கால் பாலம் அமைக்க வேண்டிய அவசியத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து ஆய்வு செய்து பணி தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். பணி ஆரம்பிக்கப்படவில்லை என்றால் காங்கிரஸ் கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story