பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் அங்கன்வாடி ஊழியர்-உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை படத்தில் காணலாம்
x
பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் அங்கன்வாடி ஊழியர்-உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை படத்தில் காணலாம்
தினத்தந்தி 21 Jan 2021 2:37 AM GMT (Updated: 21 Jan 2021 2:37 AM GMT)

கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர் வட்டார அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் வெங்கடேசபுரத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்கத்தின் வட்டார தலைவி தனம் தலைமை தாங்கினார். இதில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் அகஸ்டின், துணை செயலாளர் ரெங்கநாதன், மாவட்ட நிர்வாகி பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக்கி, காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். ஓய்வு பெறும்போது அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.10 
லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேப்பந்தட்டை
வேப்பந்தட்டையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாலைநேர ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட பொருளாளர் சுமதி தலைமை வகித்தார். வட்டார தலைவர் நிர்மலா, செயலாளர் முத்துசெல்வி, பொருளாளர் ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வேப்பந்தட்டை தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

மங்களமேடு
வேப்பூர் யூனியன் அலுவலகம் முன்பு நேற்று மாலை அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தமிழரசி தலைமை தாங்கினார். வட்டார நிர்வாகிகள் ஜெயந்தி, தனலெட்சுமி, தமிழ்ச்செல்வி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். இதில் 200-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர். மேலும், வருகிற 29-ந் தேதி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

Next Story