வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. எதிர்க்கட்சியாக கூட வர முடியாது அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு


வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. எதிர்க்கட்சியாக கூட வர முடியாது அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு
x
தினத்தந்தி 22 Jan 2021 6:49 PM GMT (Updated: 22 Jan 2021 6:49 PM GMT)

வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. எதிர்க்கட்சியாக கூட வர முடியாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி நகர அ.தி.மு.க. சார்பில் கிருஷ்ணன் திடலில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கவுன்சிலர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வகுமார், இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கணேச பாண்டியன், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் சவுந்தர்ராஜன், மாவட்ட மாணவரணி செயலாளர் முருகேசன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன் அன்புராஜ், கருப்பசாமி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் ராஜூ கலந்துகொண்டார். அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வந்தால் அ.தி.மு.க. தான் ஆளும் என்று 2019 இடைத்தேர்தலில் மக்கள் உருவாக்கி காட்டி விட்டனர். இனி வரும் சட்டமன்ற தேர்தல் ஒரு பெயருக்கு தான். 2021 சட்டமன்ற தேர்தல் ஆட்சி தொடருவதற்கான தேர்தல்தான் தவிர மாற்றத்திற்கான தேர்தல் கிடையாது. தி.மு.க.வை ஆட்சி கட்டிலில் அமர்த்தி கருணாநிதியை முதன் முதலில் முதல்வர் நாற்காலியில் அமர்த்தி அழகுபார்த்தவர் எம்.ஜி.ஆர். கருணாநிதிக்கு முதல்வர் பதவி கொடுத்த பெருமையும், புகழும் எம்.ஜி.ஆரை சாரும். அந்த நன்றியை மறந்து தி.மு.க.வினர் பேசி வருகின்றனர்.

அ.தி.மு.க.வுக்கு வரத்தயாரா?

கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் நான் ஆற்றிய பணிகள் குறித்து பட்டியல் தர தயாராக இருக்கிறேன். தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, கோவில்பட்டி தொகுதிக்கு என்ன செய்தார்? என்று பட்டியல் போட்டு சொல்ல முடியுமா?. 2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. எதிர்கட்சியாக கூட வர முடியாது. அ.தி.மு.க. ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து இல்லை. நிலஅபகரிப்பு இல்லை. குடும்ப ஆட்சி இல்லை. தி.மு.க.தான் உடைந்து போகும். மு.க.ஸ்டாலின், தான் எம்.ஜி.ஆர். ரசிகர் என்று கூறுகிறார். எம்.ஜி.ஆர். ரசிகர் இருக்க வேண்டியது அ.தி.மு.க.வில். அப்படியானால் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க.விற்குத்தான் வர வேண்டும். அவர் வர தயாரா?.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.

கூட்டத்தில் செய்தி தொடர்பாளர் வைகை செல்வன், அமைப்பு செயலாளர் ஏ.கே.சீனிவாசன், மகளிர் அணி இணைச்செயலாளர் சக்தி கோதண்டம், இலக்கிய அணி இணைச் செயலாளர் சின்னப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சத்யா, மாவட்ட கவுன்சிலர் தங்கமாரியம்மாள், கோவில்பட்டி யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், துணை தலைவர் பழனிசாமி, பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், தலைமைக்கழக பேச்சாளர் மூர்த்தி, கூட்டுறவு சங்கத்தலைவர் மகேஷ்குமார் மற்றும் பலர் பேசினார்கள். நகர மாணவரணி செயலாளர் விநாயகா முருகன் நன்றி கூறினார்.

பயிற்சி தொடக்க விழா

கோவில்பட்டி நேஷனல் என்ஜினீயரிங் கல்லூரியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தின் சார்பில் பிரதமமந்திரி கவுசல் விகாஸ் யோஜனா பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடந்தது. கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார்.

விழாவில், அமைச்சர் செல்லூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடக்க விழாவுக்கான சான்றிதழை மாவட்டதிறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் ஜெ.ஏஜ்சல் விஜயநிர்மலாவிடம் வழங்கினார். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சி மையங்களுக்கும் அவர் சான்றிதழ் வழங்கினார்.

விழாவில் சின்னப்பன் எம்.எல்.ஏ., உதவி கலெக்டர் விஜயா, தாசில்தார் மணிகண்டன் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் முக்கிய பிரமுகர்கள், பயிற்சித்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story