தென்காசி மாவட்டத்தில் குளங்களில் மீன் உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம் கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்தார்


தென்காசி மாவட்டத்தில் குளங்களில் மீன் உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம் கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 22 Jan 2021 7:58 PM GMT (Updated: 22 Jan 2021 7:58 PM GMT)

தென்காசி மாவட்டத்தில் பஞ்சாயத்து குளங்களில் மீன்உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டத்தை கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்தார்.

தென்காசி,

தென்காசி மாவட்ட தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மீன் வளர்ச்சித்துறை சார்பில் தென்காசி அருகே உள்ள கொடிக்குறிச்சி கிராமம் கடம்பன்குளத்தில் மீன் குஞ்சுகளை அதிகரிக்க செய்யும் திட்டம் தொடங்கப்பட்டது.

இதனை நேற்று மாலை மாவட்ட கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்தார்.

1½ லட்சம் மீன் குஞ்சுகள்

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தென்காசி மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து குளங்களில், மீன் உற்பத்தியை அதிகரிக்க 30 எக்டேர் பரப்பளவில் ஒரு எக்டேருக்கு நன்கு வளர்ந்த மீன் குஞ்சுகள் 5 ஆயிரம் வீதம், 5 குளங்களில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இடையர்தவணை மேலகுளத்தில் 35 ஆயிரம் குஞ்சுகள், கீழக்குளத்தில் 22 ஆயிரம் குஞ்சுகள், கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கடம்பன்குளத்தில் 25 ஆயிரம் குஞ்சுகள், வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியகுளத்தில் 55 ஆயிரம் குஞ்சுகள், செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தெற்குகுளத்தில் 12 ஆயிரத்து 500 குஞ்சுகள் ஆகிய 5 பஞ்சாயத்து குளங்களில் மொத்தம் 1½ லட்சம் நன்கு வளர்ந்த கெண்டைரக மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மீன்வளதுறை உதவி இயக்குனர் புஷ்ரா ஷப்னம், மீன்துறை ஆய்வாளர் சுமதி, உதவி பொறியாளர் ஹவ்வா ஷகிரா, வட்டார வளர்ச்சி அலுவலர் கிரேட் சர்ச்சில் ஜெபராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story