பண்ணாரி சோதனைச்சாவடியில் லாரியில் கடத்திய ரூ.65 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் டிரைவர்-கிளீனர் கைது


பண்ணாரி சோதனைச்சாவடியில் லாரியில் கடத்திய ரூ.65 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் டிரைவர்-கிளீனர் கைது
x
தினத்தந்தி 23 Jan 2021 1:16 AM GMT (Updated: 23 Jan 2021 1:16 AM GMT)

பண்ணாரி சோதனைச்சாவடியில் லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.65 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிரைவர்-கிளீனரை போலீசார் கைது செய்தனர்.

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி சோதனைச்சாவடியில் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களும், இங்கிருந்து கர்நாடகம் செல்லும் வாகனங்களும் சோதனை செய்யப்படுகிறது. அதன்படி சோதனைச்சாவடியில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் வழக்கம்போல் சோதனை நடந்து கொண்டிருந்தது.

அப்போது ஒரு லாரி அந்த வழியாக வேகமாக வந்து கொண்டிருந்தது. அந்த லாரியின் பின்பகுதி தார்ப்பாய் போட்டு மூடப்பட்டிருந்தது. பண்ணாரி சோதனைச்சாவடியில் லாரி வந்து நின்றது. அப்போது சோதனைச்சாவடியில் பணியில் இருந்த போலீசார் அந்த லாரியின் டிரைவர், கிளீனரிடம் லாரியின் பின்பகுதியில் என்ன இருக்கிறது என்று கேட்டனர்.

குட்கா

அதற்கு அவர்கள், முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்கள். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தார்ப்பாயை பிரித்து பார்த்தபோது மக்காச்சோள மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அதற்கு முன் பகுதியில் ஏராளமான பெட்டிகளும் இருந்தன. அதில் என்ன இருக்கிறது என்று 2 பேரிடமும் விசாரித்தபோது அதிலும் மக்காச்சோளம் உள்ளது என்று கூறினார்கள். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்., அவற்றில் குட்கா, ஹான்ஸ், பான்பராக் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்ததாக விசாரணையில் அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதுபற்றி சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் அங்கு சென்று, டிரைவர், கிளீனருடன் அந்த லாரியை போலீஸ் நிலையம் ெகாண்டு சென்று நிறுத்தினர்.

ரூ.65 லட்சம் மதிப்பு

அங்கு வைத்து லாரியில் இருந்த மூட்டைகளையும், பெட்டிகளையும் இறக்கினார்கள். பின்னர் பெட்டிகளை பிரித்து பார்த்தபோது அதில் குட்கா, ஹான்ஸ், பான்பராக் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.65 லட்சம் ஆகும்.

இதைத்தொடர்ந்து பிடிபட்ட 2 பேரிடம் நடத்திய விசாரணையில், லாரி டிரைவர் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரை சேர்ந்த காந்த ராஜ் (வயது 38), கிளீனர் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் (30) என்பதும், சாம்ராஜ்நகர் அருகே உள்ள ஹானூரில் இருந்து புகையிலை பொருட்களை லாரியில் ஏற்றிக்கொண்டு திருப்பூர் மாவட்டம் பல்லடத்துக்கு கொண்டு சென்றதும் தெரிய வந்தது.

டிரைவர்-கிளீனர் கைது

இதையடுத்து காந்தராஜையும், ரமேசையும் போலீசார் கைது செய்தனர். மேலும் லாரியில் இருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சத்தியமங்கலம் அருகே லாரியில் ரூ.65 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் கடத்தி வரப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story