சூளகிரி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு


சூளகிரி ஊராட்சியில் சுற்று வட்டச்சாலை அமைக்கும் பணியை, கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு
x
சூளகிரி ஊராட்சியில் சுற்று வட்டச்சாலை அமைக்கும் பணியை, கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு
தினத்தந்தி 23 Jan 2021 4:55 AM GMT (Updated: 23 Jan 2021 4:55 AM GMT)

சூளகிரி ஒன்றியத்தில் ரூ.3 கோடியே 45 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு
சூளகிரி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.3 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் 20 வளர்ச்சி் திட்டப்பணிகள் மற்றும் முடிவுற்ற பணிகளை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி, சூளகிரி ஊராட்சியில் தரம் உயர்த்தப்பட்ட சாலைப்பணிகள், புதிய அங்கன்வாடி கட்டிடத்தின் மேற்கூரை அமைக்கும் பணி, செம்பரசனபள்ளி ஊராட்சியில் பசுமை வீடு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் சுற்றுச்சுவர் பணிகள் நடைபெற்று வருகிறது.

பெத்தசிகரலபள்ளி ஊராட்சியில் தார்சாலை, அங்கன்வாடி கட்டிட மேற்கூரை அமைக்கும் பணி, அங்கொண்டபள்ளி ஊராட்சியில் பள்ளி சுற்றுச்சுவர் வர்ணம் பூசும் பணி, அத்திமுகம் ஊராட்சியில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்திற்கான கட்டிட பணிகள் நடக்கிறது. தொரப்பள்ளி ஊராட்சியில் சிமெண்டு் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியுடன் கூடிய ஆழ்துளை கிணறு, மோட்டார் பேனல் போர்டு அமைக்கும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

அலுவலர்களுக்கு உத்தரவு
இதேபோல், கானலட்டி ஊராட்சியில் கதிரடிக்கும் தளம் மற்றும் அமைக்கப்பட்ட பணியையும், மயானத்திற்கான சுற்றுச்சுவர் பணி, உத்தனபள்ளி ஊராட்சியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி அலுவலக கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். மேலும் பீர்ஜேபள்ளி, கொம்மேபள்ளி ஆகிய ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்குமாறு அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது, சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமல் ரவிகுமார், பாலாஜி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story