தென்பெண்ணையாற்றின் குறுக்கே ரூ.25 கோடியில் கட்டப்பட்ட புதிய அணைக்கட்டில் உடைப்பு


தென்பெண்ணையாற்றின் குறுக்கே ரூ.25 கோடியில் கட்டப்பட்ட புதிய அணைக்கட்டில் உடைப்பு
x
தினத்தந்தி 24 Jan 2021 4:48 AM GMT (Updated: 24 Jan 2021 4:48 AM GMT)

விழுப்புரம்- கடலூர் மாவட்ட தென்பெண்ணையாற்றின் குறுக்கே ரூ.25 கோடியில் கட்டப்பட்ட புதிய அணைக்கட்டின் கரைப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர்கள் வெளியேறியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் தளவானூர் கிராமம் மற்றும் கடலூர் மாவட்டம் எனதிரிமங்கலம் கிராமங்களுக்கு இடையே ஓடும் தென்பெண்ணையாற்றின் குறுக்கே 2 மாவட்ட விவசாயிகளின் 20 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று புதியதாக அணைக்கட்டு கட்ட அரசால் ரூ.25 கோடியே 35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரத்துறை அமைப்பு) சார்பில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே புதிய அணைக்கட்டு கட்டும் பணி கடந்த 30.1.2019 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்த அணைக்கட்டானது 400 மீட்டர் நீளமும், 3.1. மீட்டர் உயரமும் கொண்டதாக கட்டப்பட்டது. இந்த புதிய அணைக்கட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ந்தேதி திறந்து வைக்கப்பட்டது.

தண்ணீர் நிரம்பியுள்ளது

இந்த அணைக்கட்டின் இருபுறமும் பக்கத்திற்கு மூன்று மணற்போக்கிககள் வீதம் 6 மணற்போக்கிகளை கொண்டது. மேலும் இருபுறங்களிலும் அமையப்பெற்றுள்ள மணற்போக்கிகள் மூலம் வினாடிக்கு 5105.00 கனஅடி நீர் வெளியேற்றும் திறன் கொண்டது.

இங்கு அணைக்கட்டு கட்டப்பட்டதன் மூலம் இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் செறிவூட்டப்பட்டு பெண்ணையாற்றின் இரு பகுதிகளில் உள்ள விழுப்புரம் மாவட்டம் தளவானூர், கொங்கரகொண்டான், திருப்பாச்சனூர், வெளியம்பாக்கம், சித்தாத்தூர்திருக்கை, அரசமங்கலம், கள்ளிப்பட்டு, பூவரசன்குப்பம் ஆகிய 8 கிராமங்களும், கடலூர் மாவட்டம் எனதிரிமங்கலம், காவனூர், உளுந்தம்பட்டு, அவியனூர், கரும்பூர் ஆகிய 5 கிராமங்களும் என மொத்தம் 13 கிராமங்கள் மற்றும் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் உள்ள 87 திறந்தவெளி கிணறுகள் இந்த அணைக்கட்டால் பயன்பெறும். அதுமட்டுமின்றி இந்த அணைக்கட்டால் 2114.14 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். அதேபோல் மலட்டாறு, வாலாஜா கால்வாய் மற்றும் எனதிரிமங்கலம் கால்வாய்களில் தண்ணீர் செல்வதன் மூலம் பாசனம் மேம்படும், நிலத்தடி நீர்மட்டமும் உயரும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

இந்த அணைக்கட்டு திறக்கப்பட்டு 2 மாதங்களிலேயே தண்ணீர் வந்தது. வடகிழக்கு பருவமழையினாலும் மற்றும் நிவர், புரெவி புயல்களாலும் தொடர்ந்து பெய்த பலத்த மழையினால் இந்த அணைக்கட்டு நிரம்பி அதில் இருந்து தண்ணீர் இரு கரைகளையும் தொட்டவாறு ஆர்ப்பரித்து சென்றது. இதனால் விழுப்புரம்- கடலூர் மாவட்ட விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.

கரைப்பகுதியில் உடைப்பு

இந்நிலையில் அணைக்கட்டு திறக்கப்பட்டு 4 மாதங்களே ஆன நிலையில் நேற்று அணைக்கட்டு பகுதியில் இருந்து தண்ணீர் வெளியேறியது. இது 2 மாவட்ட விவசாயிகளுக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்தது.

எனதிரிமங்கலம் பகுதியில் அணைக்கரை பலமாக போடப்படாததால் கரைப்பகுதியில் உள்புறமாக உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் அதிகளவில் கசிந்து வெளியேறி வருகிறது.

சீரமைக்கப்படும்

இதுகுறித்து பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் கேட்டபோது, தடுப்பணை உறுதியாக உள்ளது. கரைப்பகுதியில் தான் உடைப்பு ஏற்பட்டு புதிய மண் அடித்துக்கொண்டு தண்ணீர் வெளியேறுகிறது. இதை நாங்கள் பைப்பிங் ஆக்‌ஷன் என்போம். இதனால் அணைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. அணைக்கட்டின் 6 ஷட்டர்களையும் திறந்து விட்டு தண்ணீரை ஓரளவிற்கு வெளியேற்றி கரையில் உடைப்பு ஏற்பட்ட பகுதி சீரமைக்கப்படும் என்றனர்.

இதற்கிடையே அணைக்கட்டில் இருந்து தண்ணீர் வெளியேறுவது தொடர்பான வீடியோ வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

விவசாயிகள் குற்றச்சாட்டு

இதுபற்றி தளவானூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

விவசாய பயன்பாட்டிற்காகவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என்பது எங்களுடைய நீண்ட நாள் கனவு.

அந்த கனவு தற்போது நிறைவேறியதால் மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நாள் நீடிக்கவில்லை. ஏனெனில் தற்போது அதில் தண்ணீரை சேமிக்க முடியாத வகையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருவது மனவேதனையை அளித்துள்ளது. தரமற்ற முறையில் அதிகாரிகள் அணைக்கட்டை கட்டியதே காரணம் என்றும், இதை விரைந்து சீரமைப்பதுடன் விசாரணை நடத்தி, உரிய சம்பந்தப்பட்ட அ திகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story