அண்ணா விளையாட்டு அரங்கத்தில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு


அண்ணா விளையாட்டு அரங்கத்தில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 24 Jan 2021 5:05 AM GMT (Updated: 24 Jan 2021 5:05 AM GMT)

நாகர்கோவில் அண்ணாவிளையாட்டு அரங்கத்தில் குடியரசு தினத்தையொட்டி போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நடந்தது. மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நாகர்கோவில்,

இந்தியாவில் குடியரசு தின விழா நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் குடியரசு தின விழா நடைபெறுகிறது. கலெக்டர் அரவிந்த் தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறார்.

பின்னர் அவர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொள்கிறார். இதற்காக போலீசார் ஆயுதப்படை மைதானத்தில் தீவிர ஒத்திகையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று விழா நடைபெறும் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நடந்தது. ஆயுதப்படை போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் இதில் கலந்து கொண்டனர். ஒத்திகையை போலீஸ் துணை சூப்பிரண்டு வேணுகோபால் பார்வையிட்டார்.

போலீஸ் பாதுகாப்பு

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவில் மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. மேலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் விதமாக குறைவானவர்கள் மட்டுமே விழாவில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் விழாவில் பங்கேற்க வருபவர்களுக்கு சானிடைசர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அதோடு குடியரசு தின விழாவையொட்டி ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. முதற்கட்டமாக விழா நடைபெற உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் பஸ் நிலையங்கள், முக்கிய பஸ் நிறுத்தங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

ரெயில் நிலையங்கள்

கன்னியாகுமரி உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சந்தேகப்படும் படியாக யாரேனும் தங்கி இருக்கிறார்களா? என்று விடுதிகள் மற்றும் லாட்ஜூகளில் போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். கடல் வழியாக மர்ம நபர்கள் ஊடுருவ வாய்ப்புகள் இருப்பதால் கடலோர காவல் படை போலீசார் கடலில் படகுகளில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் கடலோர பகுதிகளிலும் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

ரெயில் நிலையங்கள், ரெயில் தண்டவாளம் மற்றும் தண்டவாளம் செல்லும் வழியில் உள்ள பாலங்களில் ரெயில்வே போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.

Next Story