திருவாரூர் மாவட்டத்தில் தடையை மீறி டிராக்டர் ஊர்வலம் போலீசார்- விவசாயிகள் இடையே தள்ளு- முள்ளு


திருவாரூர் மாவட்டத்தில் தடையை மீறி டிராக்டர் ஊர்வலம் போலீசார்- விவசாயிகள் இடையே தள்ளு- முள்ளு
x
தினத்தந்தி 27 Jan 2021 5:52 AM GMT (Updated: 27 Jan 2021 5:52 AM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் தடையை மீறி டிராக்டர் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது போலீசார்- விவசாயிகள் இடையே தள்ளு- முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பான சூழ்நிலை உருவானது.

திருவாரூர்,

வேளாண் அவசர சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும், வேளாண் அவசர சட்டங்களுக்கு தமிழக அரசு தனது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும், ெடல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் திருவாரூரில் குடியரசு தின விழா முடிந்தபின் தேசியக்கொடியை ஏந்தி டிராக்டர், மோட்டார் சைக்கிள் வாகன ஊர்வலம் நடத்தப்படும் என அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு அறிவித்தது. இந்த ஊர்வலத்துக்கு போலீசார் தடை விதித்தனர். மேலும் தடையை மீறினால் டிராக்டர் உரிமையாளர்கள், டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதுடன், டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

போலீஸ் குவிப்பு

ஆனால் தடைைய மீறி டிராக்டர் பேரணி நடைபெறும் என விவசாயிகள் போராட்டக்குழு அறிவித்தது. இதனால் நேற்று காலை முதல் திருவாரூர் மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் போலீசார் குவிக்கப்பட்டு கிராமங்களை விட்டு டிராக்டர்கள் வெளியில் வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்தநிலையில் கொரடாச்சேரியில் இருந்து மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான பூண்டி கே.கலைவாணன் தனக்கு சொந்தமான டிராக்டரை தானே திருவாரூருக்கு ஓட்டி வந்தார். அவருக்கு பின்னால் ஏராளமான டிராக்டர்கள் அணிவகுத்து வந்தன. இது குறித்து தகவல் அறிந்த திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை தலைமையில் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு தினேஷ்குமார் மற்றும் போலீசார் திருவாரூர் தண்டலை பெட்ரோல் பங்க் எல்லை பகுதியில் குவிக்கப்பட்டனர்.

லாரிகளை நிறுத்தினர்

அப்பகுதியில் சாலையின் குறுக்கே லாரிகளை நிறுத்தி தடுப்புகள் அமைத்து டிராக்டர்களை திருவாரூருக்குள் செல்வதற்கு அனுமதி மறுத்தனர். இதனால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டு இரு தரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடன்பாடு

ஆனால் விவசாயிகள் போலீசாரின் தடுப்புகளை மீறி திருவாரூர் நகருக்குள் டிராக்டரில் நுழைந்தனர். அவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு துரை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

அப்போது தண்டலையில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம், கல்பாலம், புதிய பஸ் நிலையம் வழியாக புதிய ரெயில் நிலையத்தை அடைந்து டிராக்டர் பேரணியை நிறைவு செய்வது என உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து விவசாயிகள் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் மாசிலாமணி தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ முன்னிலையில் டிராக்டர் பேரணி தொடங்கி புதிய ரெயில் நிலையத்தில் நிறைவு பெற்றது.

இதில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் கலியபெருமாள், தி.மு.க. விவசாயிகள் சங்க மாவட்ட அமைப்பாளர் தேசபந்து, இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் துரைவேலன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் வடிவழகன், மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம் மற்றும் பலர் கொண்டனர்.

இதைப்போல திருத்துறைப்பூண்டி- வேதாரண்யம் சாலையிலிருந்து இந்திய கம்யூனிஸ்டு முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பழனிசாமி, உலகநாதன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், ஒன்றிய செயலாளர் காரல்மார்க்ஸ், நகர செயலாளர் ரகுராமன் தி.மு.க. ஒன்றிய செயலாளர் பிரகாஷ் மற்றும் அரசியல் கட்சியினர் விவசாயிகள் நூற்றுக்கணக்கானோர் திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். இந்த ஊர்வலத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி, இன்ஸ்பெக்டர் மகாதேவன், சப்-இன்ஸ்பெக்டர்கள் தேவதாஸ், சிவகுகன் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு சம்பவ இடத்தில் பரபரப்பான சூழ்நிலை உருவானது.

சாலையில் அமர்ந்து கோஷம்

அப்போது 10-க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் விவசாயிகள் தடையை மீறிய ஊர்வலமாக சென்றனர். அவர்களை கச்சனம் கடைத்தெருவில் திருத்துறைப்பூண்டி போலீசார் மற்றும் அலிவலம் போலீசார் இணைந்து மறித்தனர். இதனால் விவசாயிகள் சாலையில் அமர்ந்து கோஷம் எழுப்பினர். மேலும் சாலை ஓரத்தில் விவசாயிகள் சமையல் செய்து சாப்பிட்டனர். விவசாயிகள் போராட்டத்தால் அப்பகுதியில் 2 மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சிறிது நேரம் கழித்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.

நீடாமங்கலம்

இதைப்போல திருவாரூர் நகருக்குள் செல்ல நீடாமங்கலம் மற்றும் வலங்கைமான் ஒன்றியத்திலிருந்து 16 டிராக்டர்கள், 50 இருசக்கர வாகனங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சென்றனர். அவர்களை செல்ல விடாமல் நீடாமங்கலம் மற்றும் கொரடாச்சேரி போலீசார் நீடாமங்கலம்- திருவாரூர் நெடுஞ்சாலையில் கிளரியம் என்ற இடத்தில் தடுத்து நிறுத்தினர். இதை கண்டித்து நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் தமிழார்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம், கொட்டையூர் நாகராஜன் ஆகியோர் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. இதனால் சுமார் 2½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களி்டம் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Next Story