இணையதளத்தில் கடன் பெற ஆசைப்பட்டு ரூ.1.50 லட்சத்தை இழந்த தனியார் நிறுவன அதிகாரி


இணையதளத்தில் கடன் பெற ஆசைப்பட்டு ரூ.1.50 லட்சத்தை இழந்த தனியார் நிறுவன அதிகாரி
x
தினத்தந்தி 28 Jan 2021 9:44 PM GMT (Updated: 28 Jan 2021 9:44 PM GMT)

ஓசூர் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன அதிகாரி இணையதளத்தில் கடன் பெற ஆசைப்பட்டு ரூ.1½ லட்சத்தை இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனியார் நிறுவன அதிகாரி 
ஓசூர் அருகே உள்ள மஞ்சுஸ்ரீ நகரை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 30). இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் முதன்மை செயல் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று அவர், கூகுள் இணையதளத்தில், கடன் பெறுவது மற்றும் பண பரிவர்த்தனை தொடர்பான தகவல்களை தேடி கொண்டிருந்தார். அப்போது அதில் 2 செல்போன் எண்கள் வந்தன. அந்த எண்களுக்கு ரமேஷ்குமார் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது போனில் பேசிய ரமேஷ், எதிர் முனையில் பேசியவரிடம் இ.எம்.ஐ. மூலமாக எப்படி கடன் பெறுவது? என்ற தகவல்களை கேட்டார். அதற்கு எதிர் முனையில் பேசியவர் ரமேஷ்குமாரின் டெபிட் கார்டு எண் மற்றும் ஓ.டி.பி. எண் ஆகியவற்றை கேட்டார். இதை ரமேஷ்குமார் தெரிவித்தார். 

ரூ.1½ லட்சம் அபேஸ் 
சிறிது நேரத்தில் ரமேஷ்குமாரின் தனியார் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்து 37 பணம் எடுக்கப்பட்டிருந்தது. இதை கண்ட ரமேஷ்குமார் அதிர்ச்சி அடைந்தார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் இது குறித்து மத்திகிரி போலீசில் புகார் செய்தார். 

இந்த புகாரின் பேரில், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story