மாமல்லபுரத்தில் மீன் பிடிக்கும்போது படகு கவிழ்ந்து மீனவர் சாவு


மாமல்லபுரத்தில் மீன் பிடிக்கும்போது படகு கவிழ்ந்து மீனவர் சாவு
x
தினத்தந்தி 29 Jan 2021 3:54 AM GMT (Updated: 29 Jan 2021 3:54 AM GMT)

மாமல்லபுரம் கடலில் மீன் பிடிக்கும்போது படகு நிலைத்தடுமாறி கவிழ்ந்து மீனவர் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

மாமல்லபுரம், 

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தை சேர்ந் தவர் ராஜேஷ் (வயது 33). மீனவர். இவருக்கு ஷீலா என்ற மனைவியும், ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவர் நேற்று தனது சிறிய படகில் தன்னந்தனியாக மாமல்லபுரம் ஆழ் கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றார். அப்போது கடல் சீற்றமாக காணப்பட்ட நிலையில் படகு கடலில் தத்தளித்தது.

கடலில் வலையை விரித்து மீன் பிடித்து கொண்டிருந்த போது காற்று பலமாக வீசியதில் மீன் பிடி வலை அவரது காலில் சுற்றிக்கொண்டு படகிலும் சிக்கி கொண்டது. அப்போது படகு நிலைத்தடுமாறி கடலில் கவிழ்ந்தது.

சாவு

இதில் கடலில் மூழ்கிய ராஜேஷ் மூச்சு திணறி பரிதாபமாக இறந்தார். சற்று நேரத்தில் அவரது உடல் கரை ஒதுங்கியது. அவரது உடல் ஒதுங்கிய சிறிது நேரத்தில் அவர் சென்ற சிறிய படகும் கரை ஒதுங்கியது. இது குறித்து மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவி்க்கப்பட்டது.

தகவல் அறிந்து அங்கு வந்த மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன், சப்-இன்ஸ்பெக்டர் குப்புசாமி மற்றும் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மாமல்லபுரம் மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வில்லை.

Next Story