கட்டுமான தொழிலாளர் மாவட்ட மாநாடு

மாட்டுவண்டியில் மணல் அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
கரூர்,
கரூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று சி.ஐ.டி.யூ. கட்டுமான தொழிலாளர் சம்மேளன 5-வது மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் காதர்பாட்சா தலைமை தாங்கினார். மாநாட்டு வரவேற்பு குழு தலைவர் தண்டபாணி வரவேற்று பேசினார். மாநில பொது செயலாளர் குமார் சிறப்புரை ஆற்றினார்.
மாநாட்டில் கட்டுமான தொழில் வளர்ச்சியை முடக்குகின்ற வகையில் மிக முக்கிய மூலப்பொருளான சிமெண்டு, கம்பி உள்ளிட்டவற்றின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் மாட்டுவண்டியில் மணல் அள்ள துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரூர் மற்றும் குளித்தலை நகராட்சியில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளுக்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பசுமை வீடு திட்டப்பணிகளுக்கான நிதியை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். தொகுப்பு வீடுகள் பராமரிப்புக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story