ஒகேனக்கல் வனப்பகுதியில் இறந்து கிடந்த பெண் யானை வனத்துறையினர் குழி தோண்டி புதைத்தனர்


ஒகேனக்கல் வனப்பகுதியில் இறந்து கிடந்த பெண் யானை  வனத்துறையினர் குழி தோண்டி புதைத்தனர்
x
தினத்தந்தி 1 Feb 2021 6:00 PM GMT (Updated: 1 Feb 2021 6:02 PM GMT)

ஒகேனக்கல் வனப்பகுதியில் இறந்து கிடந்த பெண் யானையை வனத்துறையினர் குழி தோண்டி புதைத்தனர்.

பென்னாகரம்:

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு உள்ளன. இந்த யானைகள் அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி காவிரி ஆற்றில் தண்ணீர் குடித்தும், உற்சாக குளியல் போட்டும் வருகின்றன. இந்த யானைகள் அடிக்கடி சாலையை கடந்து செல்வதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஒகேனக்கல் அருகே உள்ள தேவனூர் பீட் அம்மாபள்ளம் வனப்பகுதியில் நேற்று முன்தினம் அந்த பகுதியை சேர்ந்த கிராமமக்கள் ஆடு, மாடுகள் மேய்க்க சென்றனர். அப்போது வனப்பகுதியில் பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து ஒகேனக்கல் வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

குழிதோண்டி புதைத்தனர்

அதன்பேரில் பென்னாகரம் வனச்சரக அலுவலர் முருகன் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர்  கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்த யானையை பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது இறந்த யானை 22 வயது மதிக்கத்தக்கது என்பதும், வயிறு கோளாறு காரணமாக இறந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து உயிரிழந்த யானையை பொக்லைன் எந்திரம் மூலம் அதே இடத்தில் குழி தோண்டி வனத்துறையினர் புதைத்தனர். பெண் யானை இறந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story