காடுவெட்டி பகுதியில் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 5 மாவட்ட போலீசார்


காடுவெட்டி பகுதியில் பலத்த பாதுகாப்பு பணியில்  ஈடுபட்ட 5 மாவட்ட போலீசார்
x
தினத்தந்தி 1 Feb 2021 7:53 PM GMT (Updated: 1 Feb 2021 7:53 PM GMT)

காடுவெட்டி பகுதியில் பலத்த பாதுகாப்பு பணியில் 5 மாவட்ட போலீசார் ஈடுபட்டனா்.

மீன்சுருட்டி,
அரியலூர் மாவட்டம், காடுவெட்டி கிராமத்தை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வும், மாநில வன்னியர் சங்க தலைவராக இருந்தவருமான மறைந்த குருவின் பிறந்த நாளையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த ஏராளமானோர் காடுவெட்டி கிராமத்திற்கு வரலாம் என்று முன்பே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தற்போது கொரோனா தொற்று காரணமாகவும், அதிகமானவர்கள் கூடுவதால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் என்பதாலும் மாவட்ட காவல்துறை சார்பில் கலெக்டருடன் கலந்தாலோசிக்கப்பட்டது. பின்னர் உடையார்பாளையம் கோட்டாட்சியர் பூங்கோதை தலைமையில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் சட்டம், ஒழுங்கை பாதிக்காத வகையில் குருவின் குடும்பத்தினர் மட்டும் நினைவிடத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும், மற்றவர்கள் செல்ல அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி அனைத்து தரப்பினரும் குருவின் பிறந்த நாளன்று சமாதி மற்றும் நினைவிடத்திற்கு செல்ல மாட்டோம் என்று உறுதி அளித்தனர்.
இந்நிலையில் நேற்று குருவின் பிறந்த நாளாகும். இதனால் தடையை மீறி தொண்டர்கள் யாரேனும் வரக்கூடும் என்பதால் நேற்று திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. ஆனிவிஜயாவின் உத்தரவின்படி அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சை உள்பட 5 மாவட்டங்களை சேர்ந்த போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். இதில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் 30 கூடுதல் சூப்பிரண்டுகள் மற்றும் துைண சூப்பிரண்டுகள், 50-க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் காடுவெட்டி கிராமத்தை சுற்றி 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் வாகன சோதனை நடத்தினர். இந்நிலையில் பா.ம.க. தொண்டர்கள் உள்ளிட்டோர் குருவின் நினைவிடத்திற்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story