சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூச மகா தரிசன விழா


சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூச மகா தரிசன விழா
x
தினத்தந்தி 1 Feb 2021 10:58 PM GMT (Updated: 1 Feb 2021 11:02 PM GMT)

சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூச மகா தரிசன விழா நடந்தது.

சென்னிமலை,

சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு கடந்த மாதம் 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தைப்பூச தேர் திருவிழா தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் பல்வேறு சமூகத்தினரின் மண்டப கட்டளை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் பஞ்சமூர்த்தி புறப்பாடு, திருக்கல்யாண உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 28-ந் தேதி காலை நடைபெற்றது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர். மறுநாள் மாலையில் மீண்டும் தேர் இழுக்கப்பட்டு நிலை சேர்க்கப்பட்டது. நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) இரவு தெப்ப உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.

மகா தரிசனம் 

நேற்று மகா தரிசனம் நடைபெற்றது. இதையொட்டி காலை 10 மணி முதல் கைலாசநாதர் கோவிலில் அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றம் சார்பில் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சாமிக்கு ஒரு டன் அளவிலான பல்வேறு மலர்களுடன், 16 வகையான திரவியங்கள் மற்றும் 16 வகையான கனிகளுடன் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு 7 மணிக்கு நடராஜ பெருமான் வெள்ளி விமானத்திலும், சுப்பிரமணியசாமி வெள்ளி மயில் வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில் இந்த ஆண்டு தைப்பூச தேர்த்திருவிழா பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது. அன்னதானம், கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் காவடி எடுத்து வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் குறைவாக இருந்தது.

தற்காலிக கடைகள் அமைப்பு 

ஒவ்வொரு ஆண்டும் மகா தரிசன தினத்தன்று இரவு 8 மணிக்கு மேல் சாமி புறப்பாடு நடைபெற்று, விடிய, விடிய 4 ராஜ வீதிகள் வழியாக வலம் வந்து அதிகாலையில் கைலாசநாதர் கோவிலுக்குள் அழைத்து செல்லப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடு காரணமாக சாமி ஊர்வலம் புறப்பட்ட சில மணி நேரங்களில் சாமிகள் கோவிலுக்குள் அழைத்து செல்லப்பட்டனர். தேர்த்திருவிழா நாட்களில் சுமார் 10 நாட்களுக்கு மேல் சென்னிமலையில் ஏராளமான தற்காலிக கடைகள் அமைக்கப்படும்.
இதற்காகவே கிராமப்புறங்களில் இருந்து தினமும் பொதுமக்கள் வருவார்கள். இந்த ஆண்டு தற்காலிக கடைகளுக்கும் அனுமதி வழங்காததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். எனினும் சிலர் நேற்று ஆங்காங்கே தற்காலிக கடைகளை அமைத்திருந்தனர். இதுபற்றி அறிந்தும் சென்னிமலை பேரூராட்சி மற்றும் வருவாய் துறையினர் அங்கு சென்று கலெக்டரின் உத்தரவை காட்டி கடைகளை அப்புறப்படுத்துமாறு கூறினார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடைக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின்னர் கடைகளை காலி செய்தனர்.

Next Story