பெண்ணின் உடலை வாங்க உறவினர் யாரும் வராததால் போலீசார் அடக்கம் செய்தனர்


பெண்ணின் உடலை வாங்க உறவினர் யாரும் வராததால் போலீசார் அடக்கம் செய்தனர்
x
தினத்தந்தி 6 Feb 2021 7:02 AM GMT (Updated: 6 Feb 2021 7:06 AM GMT)

மகனால் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை வாங்க உறவினர்கள் யாரும் முன் வராததால் போலீசாரே அடக்கம் செய்தனர்

மதுரை,

அம்மிக்கல்லை தலையில் போட்டு மகனால் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை வாங்க உறவினர்கள் யாரும் முன் வராததால் போலீசாரே அடக்கம் செய்தனர்.

மதுரை செல்லூர் மீனாம்பாள்புரம் சத்தியமூர்த்தி மெயின் ரோட்டை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி வஞ்சிமலர் (வயது 49). இவர்களது மகன் ஓம்சக்தி (19), அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். மகனுக்கு 3 வயது இருக்கும் போதே கருத்து வேறுபாடு காரணமாக சேகர் மனைவியை விட்டு பிரிந்து சென்று விட்டார். எனவே வஞ்சிமலர் சமையல் வேலைக்கு சென்று கஷ்டப்பட்டு மகனை வளர்த்து வந்தார். இந்த நிலையில் வஞ்சிமலருக்கு லாரி டிரைவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இதனை ஓம்சக்தி கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஓம்சக்தி அருகில் கிடந்த அம்மிக்கல்லை எடுத்து தாய் வஞ்சிமலரின் தலையில் போட்டு கொலை செய்தார்.
இந்த சம்பவம் குறித்து செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர் ஓம்சக்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் வஞ்சிமலரின் உடலை வாங்குவதற்கு உறவினர்கள் யாரும் வரவில்லை. 

மகனும் சிறையில் இருப்பதால் உறவினர்கள் யாராவது வந்தால் கொடுப்பதற்காக போலீசார் வஞ்சிமலரின் உடலை அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைத்திருந்தனர். ஆனால் உடலை வாங்க உறவினர்கள் யாரும் வராத நிலையில் செல்லூர் போலீசார் அவரது உடலை நல்லடக்கம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி நேதாஜி மெடி டிரஸ்ட் ஹரிகிருஷ்ணன் என்பவர் மூலம் மதுரை தத்தனேரி மயானத்தில் வஞ்சிமலரின் உடலுக்கு போலீசார் உரிய மரியாதை செய்து புதைத்தனர்.

Next Story