மீஞ்சூர் அருகே மனைவியின் கண்எதிரே கள்ளக்காதலனை அடித்துக்கொன்ற கணவர்


மீஞ்சூர் அருகே மனைவியின் கண்எதிரே கள்ளக்காதலனை அடித்துக்கொன்ற கணவர்
x
தினத்தந்தி 8 Feb 2021 4:20 AM GMT (Updated: 8 Feb 2021 4:20 AM GMT)

மீஞ்சூர் அருகே மனைவியின் கண் எதிரேயே கள்ளக்காதலனை அவரது கணவர் அடித்துக்கொன்றார். பின்னர் உடலை மோட்டார் சைக்கிளில் எடுத்து செல்லும்போது கணவன், மனைவி இருவரும் போலீசாரிடம் சிக்கினர்.

மீஞ்சூர், 

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த வாயலூர் ஊராட்சியில் அடங்கிய ராமநாதபுரம் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் தேவேந்திரசிங் (வயது 41). உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். இவருடைய மனைவி சாயா (33). இவர்கள் இருவரும் கடந்த 8 மாதங்களாக அங்கு தங்கியிருந்தனர்.

அதே பகுதியில் மனோஜ் (30) என்பவரும் தங்கி இருந்தார். இவரும் அதே மாநிலத்தை சேர்ந்தவர்தான். இவர்கள் 3 பேரும் கட்டிடங்களுக்கு டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தனர்.

கள்ளக்காதல்

தேவேந்திரசிங் வெளிவேலைகளுக்கு சென்றுவிட்டார். அப்போது மனோஜுக்கும், சாயாவுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் ஒன்றாக புகைப்படங்களும் எடுத்து கொண்டனர். அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததாகவும் தெரிகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்த தேவேந்திரசிங் நேற்று முன்தினம் வெளியே சென்றிருந்தார். இதையறிந்த மனோஜ், சாயா வீட்டுக்கு சென்று, நீ உன்னுடைய கணவரை விட்டுவிட்டு என்னுடன் வந்துவிடு. நாம் இருவரும் சேர்ந்து வாழலாம் என்று கூறினார். இதற்கு மறுப்பு தெரிவித்த சாயா, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அடித்துக்கொலை

இதில் ஆத்திரம் அடைந்த மனோஜ், நாம் இருவரும் நெருக்கமாக இருக்கும்போது எடுத்து கொண்ட புகைப்படங்களை உனது கணவரிடம் காட்டிவிடுவேன் என மிரட்டினார்.

அந்தநேரத்தில் வெளியே சென்றிருந்த தேவேந்திரசிங் வீட்டுக்கு திரும்பி வந்தார். தனது வீட்டில் மனைவியுடன் மனோஜ் இருப்பதை கண்டு ஆத்திரம் அடைந்தார். இதனால் வீட்டில் இருந்த உருட்டுக்கட்டையால் மனோஜை சரமாரியாக தாக்கியதுடன், மனைவியின் கண் எதிரேயே சுத்தியலாலும் அடித்தார். இதில் படுகாயம் அடைந்த மனோஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த கொலையை மறைக்க கணவன்-மனைவி இருவரும் முடிவு செய்து மனோஜின் உடலை சாக்கு மூட்டையில் கட்டினர். யாருக்கும் தெரியாமல் ஆட்கள் நடமாட்டம் இல்லாத நள்ளிரவில் எடுத்துச்சென்று உடலை அப்புறப்படுத்த முடிவு செய்தனர்.

போலீசில் சிக்கினர்

இதற்காக நள்ளிரவு வரை தூங்காமல் இருவரும் வீட்டில் விழித்து இருந்தனர். பின்னர் நேற்று அதிகாலை 2 மணியளவில் மோட்டார் சைக்கிளின் நடுவில் சாக்கு மூட்டையில் கட்டிய மனோஜ் உடலை வைத்து தேவேந்திரசி்ங், சாயா இருவரும் திருவெள்ளைவாயல் வழியாக கொக்குமேடு கிராமம் அருகே எடுத்து சென்றனர்.

அப்போது காட்டூர் போலீசார் டாஸ்மாக் கடை முன்பு வைக்கப்பட்டிருந்த பட்டா புத்தகத்தில் கையொப்பம் இட்டுவிட்டு வெளியே வந்தபோது வேகமாக சென்ற மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றனர். போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிள் நிற்காமல் சென்றது.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மோட்டார் சைக்கிளை துரத்தி சென்று வாயலூர் பஸ் நிலையத்தில் தடுத்து நிறுத்தினர். பின்னர் சாக்குமூட்டையில் சோதனை செய்தபோது அதில் ரத்த காயங்களுடன் மனோஜ் பிணம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

கைது

இதையடுத்து போலீசார் தேவேந்திரசிங், சாயா இருவரையும் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில் மனைவியுடனான கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்துள்ளது தெரியவந்தது.

மனோஜின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கைதான கணவன்-மனைவி இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story