காட்டு யானையை பிடிக்க முடியாமல் திணறுவது ஏன்?வனத்துறையினர் விளக்கம்


காட்டு யானை
x
காட்டு யானை
தினத்தந்தி 9 Feb 2021 5:04 PM GMT (Updated: 9 Feb 2021 5:04 PM GMT)

காட்டு யானையை பிடிக்க முடியாமல் திணறுவது ஏன்?

கூடலூர்

3 பேரை கொன்ற காட்டு யானையை பிடிக்க முடியாமல் திணறுவது ஏன் என வனத்துறையினர் விளக்கம் அளித்தனர். 

3 பேரை கொன்ற காட்டு யானை

பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே சப்பந்தோடு பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் தந்தை, மகன் உள்பட 3 பேரை காட்டு யானை மிதித்து கொன்றது. இதையடுத்து அந்த யானையை பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். 

ஆனால் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தியபோது, அந்த காட்டு யானை ஓட்டம் பிடித்து கேரளாவுக்கு சென்றது. பின்னர் அந்த காட்டு யானை மீண்டும் சேரம்பாடி வனப்பகுதிக்குள் வந்தது. அந்த யானையை பிடிக்க 5 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்ட போதிலும் அதை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகிறார்கள். 

இதுகுறித்து வனத்துறையினர் தரப்பில் கூறியதாவது:-

விரைவில் பிடித்து விடுவோம் 

3 பேரைக் கொன்ற காட்டு யானையுடன் சில காட்டு யானைகளும் நிற்கிறது. மேலும் காட்டு யானை கூட்டத்தில் ஒரு குட்டி யானையும் உள்ளது. கால்நடை மருத்துவக் குழுவினர் மயக்க ஊசி செலுத்துவதற்காக அருகே செல்லும்போது காட்டு யானைகள் விரட்டுகிறது. 

மேலும் யானை அடர்ந்த புதருக்குள் நிற்பதால் மயக்க ஊசியை இலக்கை நோக்கி செலுத்த முடியாத நிலை காணப்படுகிறது. இதனால் கூட்டத்தில் இருந்து அந்த யானையை பிரிக்க திட்டமிடப்பட்டது. இதில் உரிய பலன் கிடைக்கவில்லை. தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வருகிறோம். கண்டிப்பாக விரைவில் பிடித்து விடுவோம். 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 


Next Story