கணவரை விடுவிக்க கோரி போலீஸ் நிலையம் முன் குழந்தையுடன் பெண் தர்ணா


கணவரை விடுவிக்க கோரி போலீஸ் நிலையம் முன் குழந்தையுடன் பெண் தர்ணா
x
தினத்தந்தி 15 Feb 2021 6:02 PM GMT (Updated: 15 Feb 2021 6:02 PM GMT)

ஜெயங்கொண்டத்தில் கணவரை விடுவிக்க கோரி போலீஸ் நிலையம் முன் குழந்தையுடன் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜெயங்கொண்டம்:

போலீஸ் நிலையம் முன் தர்ணா
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலாயுத நகர் 5-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கலைமணி(வயது 26). இவரது கணவர் கிங்ஸ்லின்தேவகுமார் என்பவர், தனியார் நிறுவனம் ஒன்றில் சேல்ஸ்மேனாக வேலை செய்து வருகிறார். இவர் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி அளிக்கப்பட்ட புகாரின்பேரில், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கிங்ஸ்லின்தேவகுமாரை விடுவிக்கக்கோரி கலைமணி தனது குழந்தையுடன் நேற்று ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில், எனது கணவர் மீது பொய் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. எங்கள் குடும்பத்திற்கும், சிறுமியின் தந்தைக்கும் முன்விரோதம் தொடர்பாக கடந்த 13-ந் தேதி ஏற்பட்ட தகராறு காரணமாக ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் நாங்கள் கொடுத்த புகார் மீது போலீசார் நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த தகராறில் எனது தந்தை வெங்கடேசன் தாக்கப்பட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சட்டப்படி நடவடிக்கை
மேலும் அவர்கள் மீது உள்ள தவறை மறைக்க எனது கணவர் மீது பொய் புகார் அளித்துள்ளனர். எனது கணவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீசார் முயற்சி செய்கின்றனர். எனது கணவர் குற்றமற்றவர். அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும். விடுவிக்காவிட்டால் நானும், எனது 2½ வயது குழந்தையும் இறப்பதை தவிர வேறு வழி இல்லை. எங்களுக்கு ஆதரவு எனது கணவர் மட்டுமே என்று தெரிவித்து அழுது புலம்பினார்.
இதையடுத்து அங்கு வந்த ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வசந்த் மற்றும் போலீசார் கலைமணியிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இருதரப்பிலும் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் உரிய விசாரணை செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என்று தெரிவித்து, கலைமணியை சமாதானப்படுத்தினர். இதையடுத்து அவர் தர்ணா போராட்டத்தை கைவிட்டார். கணவரை மீட்க கோரி மனைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் ஜெயங்கொண்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கைது
இதற்கிடையே, தகராறு தொடர்பாக வெங்கடேசன் கொடுத்த புகாரின்பேரில் மேகநாதன் உள்ட 5 பேர் மீதும், மேகநாதன் கொடுத்த புகாரின்பேரில் ெவங்கடேசன் உள்பட 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சிறுமி புகாரின்பேரில் கிங்ஸ்லின் தேவகுமார் மீது போக்சோ சட்டத்தில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுணா வழக்குப்பதிந்து, அவரை கைது செய்தார்.

Next Story