விபத்தில் இறந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்


விபத்தில் இறந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்
x
தினத்தந்தி 16 Feb 2021 6:37 PM GMT (Updated: 16 Feb 2021 6:37 PM GMT)

விபத்தில் இறந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(வயது 55). இவர் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 8-ந் தேதி ஜெயங்கொண்டம் அருகே உள்ள உட்கோட்டை கிராமத்திற்கு பணி நிமித்தமாக மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு திரும்பினார். சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது மோதாமல் இருக்க அவசரமாக பிரேக் பிடித்தபோது, நிலைதடுமாறி ேமாட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த ராதாகிருஷ்ணன், தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து ராதாகிருஷ்ணனின் சொந்த ஊரான கோடங்குடி கிராமத்திற்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நேற்று மாலை அவருடைய உடல் அடக்கம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி அவருடைய உடலுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் ராதாகிருஷ்ணனின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

Next Story