விழுப்புரத்தில் பரபரப்பு: மாமியாரின் 2-வது கணவர் குத்திக்கொலை- மருமகன் வெறிச்செயல்


கொலை செய்யப்பட்ட பாலமுருகன்
x
கொலை செய்யப்பட்ட பாலமுருகன்
தினத்தந்தி 17 Feb 2021 4:48 PM GMT (Updated: 17 Feb 2021 4:48 PM GMT)

விழுப்புரத்தில் மாமியாரின் 2-வது கணவரை, மருமகன் குத்திக் கொலை செய்தார்.

விழுப்புரம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா ஏ.சாத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் பல்சன் மகன் பாலமுருகன் (வயது 28). இவர் விழுப்புரம் காந்தி சிலை அருகில் உள்ள ஒரு ஓட்டலில் பிரியாணி மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவர் தினமும் ஏ.சாத்தனூரில் இருந்து விழுப்புரம் வந்து ஓட்டல் வேலையை முடித்துவிட்டு, மீண்டும் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.

இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் ராஜகோபால் வீதியில் உள்ள ஒரு வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது மார்பு, வயிறு, இடுப்பு உள்ளிட்ட இடங்களில் ரத்தக்காயங்கள் இருந்தன. அதே வீட்டில் விஜி மனைவி சித்ரா(39) என்பவர் பலத்த காயத்துடன் மயங்கிய நிலையில் கிடந்தார். 

கத்தியால் குத்திக்கொலை

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுகுறித்து அவர்கள் விழுப்புரம் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மருது, பாலசிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 

பின்னர் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த சித்ராவை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து, பாலமுருகனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், சித்ராவின் மருமகனான விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வரும் சோனுசர்மா (32) என்பவர் பாலமுருகனை கத்தியால் குத்திக்கொலை செய்திருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.

கிடுக்கிப்பிடி விசாரணை

இதையடுத்து சோனுசர்மாவை போலீசார் பல்வேறு இடங்களில் வலைவீசி தேடி வந்த நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை அருகில் அவரை போலீசார் மடக்கிப்பிடித்தனர். 
பின்னர் சோனுசர்மாவை போலீசார், விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை செய்தனர். விசாரணையில் வெளியான தகவல்கள் விவரம் வருமாறு:-

சித்ராவுக்கும் விஜி என்பவருக்கும் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு கவுசல்யா (24) என்ற மகளும், சக்திவேல் (22) என்ற மகனும் உள்ளனர். கவுசல்யாவை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சோனுசர்மாவுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். சித்ரா, விழுப்புரம் சண்முகபுரம் காலனியில் உள்ள வீடுகளில் வீட்டு வேலைகள் செய்து வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் சித்ராவின் கணவர் விஜி இறந்து விட்டார். அதன் பிறகு சித்ரா மட்டும் விழுப்புரம் ராஜகோபால் வீதியில் தனியாக வசித்து வருகிறார்.

கள்ளக்காதல்

இவர் விழுப்புரம் சண்முகபுரம் காலனியில் வீட்டு வேலைக்கு செல்ல தனது வீட்டில் இருந்து நடந்து விழுப்புரம் காந்தி சிலை அருகில் சென்று அங்கிருந்து ஷேர் ஆட்டோ மூலம் சண்முகபுரம் காலனிக்கு சென்று வருவார். அவ்வாறு சித்ரா, விழுப்புரம் காந்தி சிலை அருகில் ஷேர் ஆட்டோவுக்காக நிற்கும் சமயத்தில் அவருக்கும் அருகில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்த பாலமுருகனுக்கும் கடந்த 6 மாதமாக பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களிடையே கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.
இந்த சூழலில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பாலமுருகன், ஏ.சாத்தனூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சித்ராவை அழைத்துச்சென்று இவர் ஒரு அனாதை, இவருக்கு யாரும் கிடையாது என்று கூறி பெற்றோர் சம்மதத்துடன் அருகில் உள்ள ஒரு கோவிலில் தாலி கட்டி சித்ராவை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு சித்ராவும், பாலமுருகனும் விழுப்புரம் ராஜகோபால் வீதியில் குடும்பம் நடத்தி வந்தனர்.

ஆசைக்கு இணங்க வற்புறுத்தல்

இந்த விஷயம் சித்ராவின் மருமகனான சோனுசர்மாவிற்கு தெரியவரவே அவர் தனது மாமியார் சித்ராவிடம் பிரச்சினை செய்து வந்தார். நான் இருக்கும்போது எதற்காக பாலமுருகனை திருமணம் செய்து கொண்டாய் என்றும், பாலமுருகனுடன் குடும்பம் நடத்துவதை கைவிட்டு, தன்னுடன் சேர்ந்து வாழும்படியும் வற்புறுத்தி வந்துள்ளார். இருப்பினும் சித்ராவும் பாலமுருகனும் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் அவர்கள் இருவரின் மீதும் சோனுசர்மாவிற்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது.


Next Story