எப்போதும் இல்லாத அளவு இந்த ஆண்டு: 11 டி.எம்.சி. தண்ணீர் கையிருப்பு இருப்பதால் கோடையை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்


எப்போதும் இல்லாத அளவு இந்த ஆண்டு: 11 டி.எம்.சி. தண்ணீர் கையிருப்பு இருப்பதால் கோடையை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்
x
தினத்தந்தி 19 Feb 2021 5:26 AM GMT (Updated: 19 Feb 2021 5:26 AM GMT)

எப்போதும் இல்லாத அளவு இந்த ஆண்டு சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 11 டி.எம்.சி. நீர் கையிருப்பு இருப்பதால் வினியோகமும் முறைப்படுத்தப்பட்டு இருப்பதுடன், கோடையை மகிழ்ச்சிகரமாக வரவேற்கிறோம் என்று பொதுப்பணித்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சென்னை, 

சென்னை மாநகரின் மக்கள் தொகை ஆண்டு தோறும் அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக கடந்த 1950-ம் ஆண்டு சென்னையில் 14 லட்சத்து 91 ஆயிரத்து 293 பேர் வசித்து வந்தனர். அது படிப்படியாக உயர்ந்து தற்போது 2021-ம் ஆண்டு 1 கோடியே 12 லட்சத்து 35 ஆயிரத்து 18 பேர் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு சராசரியாக ஒரு மாதத்திற்கு குடிநீர் தேவைக்காக 1 டி.எம்.சி. தண்ணீர் வரை தேவைப்படுகிறது. இவற்றை, அண்டை மாவட்டங்களில் உள்ள பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஏரி அத்துடன் நெம்மேலி, மீஞ்சூர் ஆகிய பகுதிகளில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களில் இருந்து பெறப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

குடிநீர் கையிருப்பு

இந்த ஏரிகளுக்கு, தமிழக அரசு மற்றும் ஆந்திர மாநில அரசுகள் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கிருஷ்ணா நதி நீர் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 2 தவணைகளில் 12 டி.எம்.சி. வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் எந்த ஆண்டும் முழுமையாக வழங்காததுடன், பெரும்பாலான ஆண்டுகளில் பருவ மழைகளும் பொய்த்து போவதால் சென்னை மாநகரில் ஆண்டுதோறும் கோடைக்காலம் என்று வந்துவிட்டாலே கூடவே குடிநீர் பஞ்சமும் வருவது வழக்கமாக இருந்து வந்தது.

இதனால் பொதுப்பணித்துறையும், குடிநீர் வாரிய அதிகாரிகள், பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக கல்குவாரி, நிலக்கரி சுரங்கம், விவசாய விளைநிலங்கள் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து ரெயிலில் குடிநீர் கொண்டு வருவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அவ்வாறு இல்லாமல் ஏரிகளில் போதுமான அளவு குடிநீர் கையிருப்பு இருப்பதால் கோடையை சந்திக்க தயாராக அதிகாரிகள் இருக்கின்றனர்.

கோடையை மகிழ்ச்சியுடன் வரவேற்பு

கோடையில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய இந்த ஆண்டு தண்ணீருக்கு எங்கும் அலைய வேண்டியது இல்லை. ஏரிகளிலேயே 11.22 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இதுதவிர வீராணம் ஏரியிலும் தண்ணீர் உள்ளது. அத்துடன் நெம்மேலி, மீஞ்சூரில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களில் இருந்து கடல் நீரை குடிநீராக மாற்றி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

குடிநீர் இருப்பு உள்ளதால், வினியோகத்தில் எந்த பிரச்சினையும் ஏற்படாமல் இருப்பதற்காக பழுதான குழாய்கள் மாற்றம், தேவைப்படும் இடங்களுக்கு புதிய இணைப்புகள் வழங்குவது, விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் லாரிகளில் வினியோகம் உள்ளிட்ட பணிகளும் நடந்து வருகிறது. தற்போது வழங்கப்படுவது போல் கோடையிலும் அதிகபட்சமாக 830 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படும். பொதுமக்களும் அச்சப்பட தேவையில்லை. இதே நிலை வருகிற டிசம்பர் மாதம் வரை தொடர வாய்ப்பு உள்ளது. எனவே இந்த ஆண்டு வரவிருக்கும் கோடையை முழுமையாக மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.

மேற்கண்ட தகவல்களை பொதுப்பணித்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Next Story