வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Feb 2021 5:19 PM GMT (Updated: 26 Feb 2021 5:19 PM GMT)

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்கள் தஞ்சையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 9 தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள 9 போக்குவரத்து தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் நேற்று ஜெபமாலைபுரத்தில் உள்ள போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச தொழிற்சங்கத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார்.

இதில் தொ.மு.ச. சங்கத்தை சேர்ந்த கோவிந்தராஜ், சி.ஐ.டியூ. தொழிற்சங்கத்தை சேர்ந்த ராமசாமி, காரல்மார்க்ஸ், ஏ.ஐ.டி.யூ.சி. சங்கத்தை சேர்ந்த சண்முகம், கஸ்தூரி, ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்கத்தை சேர்ந்த சரவணன், குலோத்துங்கன், எச்.எம்.எஸ். சங்கத்தை சேர்ந்த முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோ‌‌ஷங்கள் எழுப்பினர்

ஆர்ப்பாட்டத்தில் 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை பேசி தீர்வு காண காலஅவகாசம் அளித்தும் போக்குவரத்து துறை அமைச்சர் அலட்சியப்படுத்தியதன் காரணமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஆனால் போக்குவரத்து துறைஅமைச்சர் இடைக்கால நிவாரணமாக ரூ.1000 தொழிற்சங்கங்களை அழைத்து பேசாமல் அறிவித்து இருப்பது கண்துடைப்பாகும். எனவே போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. நீலமேகம், ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் சந்திரகுமார், சி.ஐ.டி.யூ. மாநில செயலாளர் ஜெயபால், ஏ.ஐ.டி.யூ.சி. போக்குவரத்து தொழிற்சங்க துணைத்தலைவர் துரை.மதிவாணன் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு பேசினர்.

Next Story