கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 5 பேர் கைது


கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 5 பேர் கைது
x
தினத்தந்தி 7 March 2021 7:01 PM GMT (Updated: 7 March 2021 7:01 PM GMT)

சிவகாசி உட்கோட்டத்தில் தனித்தனி சம்பவங்களில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவகாசி, 
சிவகாசி உட்கோட்டத்தில் தனித்தனி சம்பவங்களில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். 
மிரட்டல் 
சிவகாசி அருகே உள்ள பூவநாதபுரம் வடபட்டி பகுதியை சேர்ந்தவர் கணேசன் என்கிற கணேஷ்வரன் (வயது 30). இவர் சிவகாசி-ஆலங்குளம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியின் அருகில் வந்து கொண்டிருந்த போது அப்போது அங்கு வந்த காக்கிவாடன்பட்டியை சேர்ந்த சீனிவாசன் (43) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி கணேஷ்வரனிடம் இருந்து ரூ.450 பறித்து கொண்டு சென்றுள்ளார். 
இது குறித்த புகாரின் பேரில் மாரனேரி போலீசார் சீனிவாசனை கைது செய்தனர். 
2 பேர் கைது 
இதேபோல் சிவகாசி அருகே உள்ள நல்லுத்தேவன்பட்டியை சேர்ந்த அசோக்குமார் (36) என்பவர் திருத்தங்கல்-கங்காகுளம் ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். 
அப்போது அவரை திருத்தங்கலை சேர்ந்த மகேந்திரன் (37), சபரிகுமார் (40) ஆகியோர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.1000 மற்றும் கைக்கெடிகாரத்தை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குபதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
காய்கறி மார்க்கெட்
இதேபோல் திருத்தங்கல் அண்ணாகாலனியை சேர்ந்தவர் பாலமுருகன் (44). இவர் திருத்தங்கல்-விருதுநகர் மெயின் ரோட்டில் உள்ள வடமலாபுரம் பாலம் அருகில் சென்ற போது அங்கு வந்த வினோத்கண்ணன் (35) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500 பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வினோத்கண்ணனை கைது செய்தனர். 
இதேபோல் திருத்தங்கல் ஆலாவூரணியை சேர்ந்த ராஜலிங்கம் (26) என்பவர் சிவகாசி அண்ணா காய்கறி மார்க்கெட் அருகில் வந்து கொண்டிருந்த போது அங்கு வந்த சாட்சியாபுரம் விநாயகர் காலனியை சேர்ந்த பாண்டியராஜன் என்கிற ஸ்டெல்லாபாண்டி (41) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.300-யை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார், பாண்டியராஜனை கைது செய்தனர்.

Next Story