நாமக்கல் அருகே வாகன சோதனையில் ரூ.1.65 லட்சம் பறிமுதல்


நாமக்கல் அருகே வாகன சோதனையில் ரூ.1.65 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 8 March 2021 6:46 PM GMT (Updated: 8 March 2021 6:46 PM GMT)

நாமக்கல் அருகே உரிய ஆவணம் இன்றி காரில் எடுத்து செல்லப்பட்ட ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்தை நிலையான கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.

நாமக்கல்:
நாமக்கல் அருகே உரிய ஆவணம் இன்றி காரில் எடுத்து செல்லப்பட்ட ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்தை நிலையான கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.
வாகன சோதனை
சட்டசபை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க நாமக்கல் மாவட்டத்தில் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு என மொத்தம் 36 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுவினர் இரவு, பகலாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று நாமக்கல் அருகே உள்ள மின்னாம்பள்ளி பகுதியில் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது புதன்சந்தையில் இருந்து சேந்தமங்கலம் நோக்கி சென்ற ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்து 800 கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. 
ரூ.1.65 லட்சம் பறிமுதல்
இதையடுத்து காரில் இருந்தவரிடம் நிலையான கண்காணிப்பு குழுவினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கரூர் மாவட்டம் நெடுங்கூரை சேர்ந்த கார்த்திக் (வயது 32) என்பதும், டெக்ரேசன் தொழில் செய்து வருவதும் தெரியவந்தது. மேலும், அவர் வேலையாட்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்து 800-ஐ கொண்டு சென்றதும், அதற்கு உரிய ஆவணம் இல்லை என்பதும் தெரிந்தது.
பின்னர் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து நாமக்கல் தாசில்தார் தமிழ் மணியிடம் ஒப்படைத்தனர். உரிய ஆவணத்தை காண்பித்து பணத்தை பெற்று செல்லலாம் என்று கார்த்திக்கிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story