பவானியில், பஸ் புறப்படும் நேர பிரச்சினையில் தகராறு: கண்டக்டர்- டிரைவர் மோதல்

பவானியில், பஸ் புறப்படும் நேர பிரச்சினையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கண்டக்டரும் டிரைவரும் மோதிக்கொண்டனா்.
பவானி
பவானியை அடுத்த புன்னம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரவடிவேல் (வயது 47). இவர் பவானியில் இருந்து ஆப்பக்கூடல் செல்லும் அரசு பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இதேபோல் அந்தியூர் அருகே உள்ள மறவன்குட்டையை சேர்ந்தவர் சுப்பிரமணி (29). இவர் பவானியில் இருந்து ஆப்பக்கூடல் வழியாக தூக்கநாயக்கன்பாளையம் செல்லும் தனியார் பஸ்சில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் பவானி பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மாலை 3.10 மணிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்லவேண்டிய தனியார் பஸ் 2.55 மணிக்கு முன்னதாகவே பயணிகளை ஏற்றியதாக கூறப்படுகிறது. இதனால் 3.05 மணிக்கு ஆப்பக்கூடல் புறப்படக்கூடிய அரசு பஸ்சில் பயணிகள் ஏறவில்லை. இதன்காரணமாக அரசு பஸ்சின் கண்டக்டரான சுந்தரவடிவேல் தனியார் பஸ்சில் ஏறி அங்கிருந்த பயணிகளை அரசு பஸ்சில் ஏறும்படி கூறியதாக தெரிகிறது. இதனால் அரசு பஸ் கண்டக்டரான சுந்தரவடிவேலுவுக்கும், தனியார் பஸ் டிரைவரான சுப்பிரமணிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. வாய்த்தகராறு முற்றியதில் 2 பேரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதை கண்டதும் அங்கிருந்த மற்ற பஸ்களின் டிரைவர்கள், கண்டக்டர்கள் ஓடிச்சென்று 2 பேரையும் தடுத்து சமாதானப்படுத்தினர். எனினும் இந்த தாக்குதலில் 2 பேருக்கும் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து 2 பேரும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனால் 2 பஸ்களும் சிறிது நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதுகுறித்து ஒருவர் மீது ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் 2 பேர் மீதும் பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story