கொந்தகையில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது


கொந்தகையில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது
x
தினத்தந்தி 17 March 2021 5:45 PM GMT (Updated: 17 March 2021 5:45 PM GMT)

கொந்தகையில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது

திருப்புவனம்
7-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் கீழடி அருகே கொந்தகையில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது.
7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி
திருப்புவனம் யூனியன் கீழடி ஊராட்சியில் தொல்லியல் துறை சார்பில் 5 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளது. இதைதொடர்ந்து 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கீழடியிலும் அதைச் சுற்றியுள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளிலும் கடந்த ஆண்டு நடைபெற்றது. 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் 2600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பழங்கால மனிதர்களின் வாழ்க்கை பற்றிய பல்வேறு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் கீழடியில் ஒரு குழி தோண்டப்பட்டது. அதில் பாசி, மணிகள், சில்லுவட்டுக்கள் மற்றும் பானை ஓடுகள் கிடைத்தது. 
இதையடுத்த கொந்தகையில் 2 குழிகள் தோண்டப்பட்டு அகழ்வாராய்ச்சி நடந்தது. அதில் ஒரு குழியில் சுமார் 2 ஆழம் தோண்டும்போது நான்கு முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று மூடியுடன் முழுவதும் உள்ள நிலையிலும், அருகில் கருப்பு சிவப்பு வண்ணத்தில் உள்ள படையல் தட்டும் காணப்பட்டது. மேலும் 2 முதுமக்கள் தாழிகள் சிதைந்த நிலையிலும், மற்றொன்று மண்ணுக்குள் புதைந்த நிலையிலும் கண்டெடுக்கப்பட்டது. இங்கு 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் அனைத்தும் அகலமான வாய் பகுதியாக இருந்தது. 
முதுமக்கள் தாழி
இப்போது கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழியில் கீழ்ப்பகுதி அகலமாகவும், மேல் பகுதி சுருங்கியும் மூடி மிகவும் சிறிய அளவில் காணப்படுகிறது. இதேபோல் அகரத்திலும் பணிகள் தொடங்கப்பட்டு அங்கு விதவிதமான மண்பாண்ட ஓடுகளும், சிறிய பானையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கொந்தகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மூடியுடன் உள்ள முதுமக்கள் தாழியை மாநில தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Next Story