பூக்கள் விலை கடும் வீழ்ச்சி, மல்லிகை ரூ.125-க்கு விற்பனை


பூக்கள் விலை கடும் வீழ்ச்சி, மல்லிகை ரூ.125-க்கு விற்பனை
x
தினத்தந்தி 21 March 2021 6:53 PM GMT (Updated: 21 March 2021 6:53 PM GMT)

பூக்கள் விலை கடும் வீழ்ச்சி, மல்லிகை ரூ.125-க்கு விற்பனை

ஆரல்வாய்மொழி, 
குமரி மாவட்டம் தோவாளையில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு உள்ளூர், வெளியூர் மட்டுமன்றி பிற மாவட்டங்களிலிருந்தும் பூக்கள் வந்து குவிகின்றன. குறிப்பாக ஓசூர், பெங்களூர், சேலம், ராயக்கோட்டை, நிலக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பகுதியில் இருந்து தோவாளை பூ மார்க்கெட்டுக்கு பூக்கள் வருகின்றன.  பூக்களின் விலை ஏறி இறங்கும் தன்மை உடையது. அதாவது பூக்கள் அதிகமாக தேவைப்படும் பண்டிகை காலங்கள், கோவில் திருவிழா மற்றும் திருமண நாட்களில் பூக்கள் விலை அதிகமாகவும், தேவை அதிகம் இல்லாத நாட்களில் பூக்களின் விலை குறைவாகவும் இருக்கும். 
இந்தநிலையில் தோவாளை பூ மார்க்கெட்டில் நேற்று பூக்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்தது. நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.400-க்கு விற்பனையான பிச்சி ரூ.150-க்கும், ரூ.250-க்கு விற்பனையான மல்லிகை ரூ.125-க்கும் விற்பனையானது. இதேபோல மற்ற பூக்களின் விலையும் குறைந்து இருந்தது. 
பூக்களின் விலை வீழ்ச்சி குறித்து வியாபாரி கிருஷ்ணகுமார் கூறும்போது, தற்போது அனைத்து பூக்களின் வரத்து அதிகமாக உள்ளது. மேலும் கோவில் திருவிழா, பண்டிகை இல்லாததாலும், பூ வியாபாரிகள் அதிகம் வராததாலும் பூக்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பூக்களின் விலை பின்வருமாறு:-
ஆரளி ஒரு கிலோ ரூபாய் ரூ.70, முல்லை ரூ.150, கனகாம்பரம் ரூ.300, வாடாமல்லி ரூ.40, துளசி ரூ.20, தாமரை ஒரு எண்ணம் ரூ.3, கோழிப்பூ ரூ.40, பச்சை ஒரு கட்டு ரூ.3, பாக்கெட் ரோஸ் ரூ.10, பட்டன் ரோஸ் ரூ.50, ஸ்டெம்பு ரோஸ் ரூ.120, மஞ்சள் கேந்தி ரூ.40, சிவப்பு கேந்தி ரூ.40, சிவந்தி மஞ்சள் ரூ.150, சிவந்தி வெள்ளை ரூ.150, கொழுந்து ரூ.80, மரிக்கொழுந்து ரூ.100-க்கும் விற்பனையானது.

Next Story