முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலேயே ஓட்டுபோட்டனர்


முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலேயே ஓட்டுபோட்டனர்
x
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலேயே ஓட்டுபோட்டனர்
தினத்தந்தி 28 March 2021 5:52 PM GMT (Updated: 28 March 2021 5:53 PM GMT)

கோவையில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் வீடுகளில் இருந்தவாறே அதிகாரிகள் முன்னிலையில் ஓட்டுப்போட்டனர்.

கோவை,

வருகிற 6-ந்தேதி நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்று திறனாளிகள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க சிரமமாக இருப்பதாக கூறி அவர்களுக்கு வர இருக்கிற தேர்தலில் முதன்முதலாக தபால் ஓட்டுகள் வழங்கப்படுகின்றன.

அதன்படி கோவை மாவட்டத்தில் சுமார் 62 ஆயிரம் பேர் 80 வயதுக்கு மேற்பட்டவர்களும், 18 ஆயிரம் பேர் மாற்று திறனாளிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

அவர்கள் தங்களுக்கு தபால் ஓட்டுகள் வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை மனு அளிப்பதற்கு அவகாசம் அளிக்கப்பட்டது. 

அந்த அவகாசம் முடிந்த பின்னர் கோவை மாவட்டத்தில் 7 ஆயிரத்து 854 பேர் தான் தங்களுக்கு தபால் வாக்குகள் வேண்டும் என்று கோரியிருந்தனர். 

இவர்களில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 7 ஆயிரத்து 854 பேர். மாற்றுத்திறனாளிகள் 605 பேர்.

அதிகாரிகள் நேரில் சென்று பதிவு

அதன்பேரில் அவர்களுக்கு மட்டும் தபால் வாக்குகள் வழங்குவதற்கான பணிகளை தேர்தல் பிரிவு ஊழியர்கள் செய்தனர். அதன்படி கோவை மாவட்டத்தில் தபால் வாக்குகள் நேற்று தொடங்கி நாளை (செவ்வாய்க்கிழமை) வரை பதிவு செய்யப்பட்டு சேகரிக்கப்படுகின்றன.

 இதற்காக 10 தொகுதிக்கும் தலா 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் ஒரு குழு தலைவர், ஒரு நுண்பார்வையாளர், ஒரு போலீஸ்காரர், ஒரு வீடியோ கேமரா மேன், மாநகராட்சி ஊழியர் ஒருவர் என 5 பேர் உள்ளனர். 

இவர்கள் தவிர அந்தந்த வாக்குச்சாவடி அலுவலர் (பி.எல்.ஓ.) இடம் பெற்றிருப்பார். அவர் யார்-யார் தபால் வாக்குகள் வேண்டும் என்று கேட்டார்களோ அவர்களின் வீடுகளுக்கு சென்று குறிப்பிட்ட நேரத்தில் தபால் வாக்குகள் பதிவு செய்ய தேர்தல் பிரிவு குழுவினர் வருவார்கள் என்று தெரிவித்திருந்தனர்.

வீட்டுக்குள் கொண்டு செல்ல அனுமதியில்லை

அதன்படி கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட ராம்நகர் சாஸ்திரி வீதியில் உள்ள 80 வயதுக்கு மேற்பட்ட ராஜலட்சுமி, சித்தராஜன், மற்றொரு ராஜலட்சுமி ஆகியோர் நேற்றுக்காலை தபால் ஓட்டுகள் போட்டனர். 

அவர்களின் வீடுகளுக்கு சென்ற தேர்தல் பிரிவு குழுவினர் 80 வயதுக்கு மேற்பட்டு வாக்களிப்பவரின் புகைப்பட அடையாளத்தை சரிபார்த்த பின்னர் அவர்களிடம் வாக்குச்சீட்டையும், வாக்காளரின் உறுதி மொழி படிவத்தையும் அளித்தனர். 

அதை வாக்காளர் தனது வீட்டுக்குள் சென்று உறுதி மொழி படிவத்தில் 3 இடங்களில் கையெழுத்திட்டு அதன்பின்னர் வாக்குச்சீட்டில் வாக்காளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு முன்பு பேனாவால்  டிக் அடித்து அதை ஒரு உறையில் போட்டு மூடி ஒட்டினார்கள்.

அதன் பின்னர் தேர்தல் குழுவினர் கொண்டு சென்ற ஓட்டுப்பெட்டியில் அதிகாரிகள் முன்னிலையில் ஓட்டு போட்டனர். வாக்காளரின் வீட்டுக்குள் வாக்குப்பெட்டியை எடுத்துச் செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதே போல தேர்தல் குழுவினரும் வீட்டுக்குள் செல்ல அனுமதி கிடையாது.

 வாக்களிப்பவர் தனது உறவினரின் உதவியோடு தபால் வாக்கை பதிவு செய்த பின்னர் அந்த பெட்டி மாலையில் தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. 

கோவை ராம்நகரில் சாஸ்திரி வீதியில் தேர்தல் குழு தலைவர் சத்தியமூர்த்தி, தேர்தல் நுண்பார்வையாளர் சத்தியகுமார் ஆகியோர் முன்னிலையில் தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்டன.
3 நாட்கள்

இதுகுறித்து தேர்தல் குழு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தபால் வாக்குகள் பதிவு செய்யும் பணி 3 நாட்கள் நடக்கிறது. ஒரு வீட்டுக்கு ஒரு முறை செல்லும் போது வாக்களிப்பவர் இல்லையென்றால் அடுத்த முறை அந்த வீட்டுக்கு செல்வோம். அப்போதும் அவர்கள் இல்லையென்றால் அவர்கள் வாக்களிக்க முடியாது. 

வாக்குச்சாவடிக்கு சென்றும் வாக்களிக்க முடியாது. ஒரு குழு ஒரு நாளுக்கு 50 தபால் வாக்குகளை தான் பதிவு செய்ய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story