போலீசார் தபால் வாக்குப்பதிவு


போலீசார் தபால் வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 29 March 2021 7:39 PM GMT (Updated: 29 March 2021 7:39 PM GMT)

தேர்தலில் பணியாற்ற உள்ள போலீசார், ஊர் காவல் படை வீரர்கள் தபால் வாக்குகளை செலுத்தினர்.

பெரம்பலூர்
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பணியாற்ற உள்ள போலீசார், ஊர் காவல் படையினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தலில் பணியாற்ற உள்ள 3,916 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும், 72 மண்டல அலுவலர்களுக்கும், பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியை சேர்ந்த 531 போலீசாருக்கும், குன்னம் தொகுதியை சேர்ந்த 816 போலீசாருக்கும், அரியலூர் மாவட்டத்தில் போலீசாக பணியாற்றக்கூடிய பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 146 பேருக்கும், பிற மாவட்டங்களில் பணியாற்றக்கூடிய பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கும், ஊர் காவல் படை வீரர்களுக்கும், தேர்தலில் பணியாற்றவுள்ள முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் தபால் வாக்குகள் வழங்கப்பட்டுள்ளன. பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்கள், மண்டல அலுவலர்கள் கடந்த 27-ந் தேதி முதல் தபால் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். மேலும் முதியோர்-மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து தபால் வாக்கு பெறும் பணி தேர்தல் அலுவலர்களால் நடைபெற்று வருகிறது.
தேர்தல் அதிகாரி ஆய்வு
இந்தநிலையில் தேர்தலில் பணியாற்றவுள்ள போலீசார், ஊர் காவல் படை வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் தபால் வாக்குகள் செலுத்துவதற்காக நேற்று தண்ணீர்பந்தலில் உள்ள பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை மைதான வளாகத்தில் உள்ள மண்டபத்தில் மாட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டி ஒன்றில் போலீசார், ஊர் காவல் படை வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் ஆர்வத்துடன் வந்து தபால் வாக்கினை செலுத்தினர். தபால் வாக்குகள் செலுத்தும் பணியை பெரம்பலூர் தேர்தல் நடத்தும் அதிகாரி பத்மஜா, உதவி ஆணையர் (கலால்) ஷோபா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


Next Story