கடலூரில் கொரோனாவுக்கு பெண் பலி மேலும் 51 பேருக்கு தொற்று உறுதி


கடலூரில்  கொரோனாவுக்கு பெண் பலி  மேலும் 51 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 31 March 2021 8:50 PM GMT (Updated: 31 March 2021 8:50 PM GMT)

கடலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் பலியானார். மேலும் மாவட்டத்தில் புதிதாக 51 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடலூர், 

51 பேருக்கு தொற்று

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 25 ஆயிரத்து 655 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 25 ஆயிரத்து 112 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 290 பேர் பலியாகியுள்ளனர். நேற்று வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 51 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதில் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 6 பேருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 45 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்து 706 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் நேற்று பலியானார். அதுபற்றிய விவரம் வருமாறு:-

பெண் சாவு

கடலூரை சேர்ந்தவர் 40 வயதுடைய பெண். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்ட அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு, உமிழ்நீர் எடுத்து பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி நேற்று காலை அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 291 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று 20 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 207 பேருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது.


Next Story