வாக்குச்சாவடிகளில் பயன்படுத்துவதற்கான பொருட்களை தயார் செய்யும் பணி தீவிரம்


வாக்குச்சாவடிகளில் பயன்படுத்துவதற்கான பொருட்களை தயார் செய்யும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 1 April 2021 8:17 PM GMT (Updated: 1 April 2021 8:17 PM GMT)

வாக்குச்சாவடிகளில் பயன்படுத்துவதற்கான பொருட்களை தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது.

பெரம்பலூர்:

வாக்குப்பதிவு எந்திரங்கள்
சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந்தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் (தனி), குன்னம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்காளர்களின் வாக்குப்பதிவினை உறுதி செய்யும் எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் ஆகியவை பெரம்பலூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது.
இதில் குன்னம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 388 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குப்பதிவினை உறுதி செய்யும் எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் ஆகியவை பிரிக்கப்பட்டு குன்னம் தாலுகா அலுவலகத்திற்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டன. பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 428 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு எந்திரங்கள், கருவிகள் ஆகியவை சப்-கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடிகளுக்கான பொருட்கள்
இந்த நிலையில் வாக்குச்சாவடிகளில் தேர்தல் நாளன்று பயன்படுத்த தேவையான வாக்காளர் பட்டியல், பூத் சிலிப், பேனா, பென்சில், வாக்குப்பதிவு எந்திரம், வாக்குப்பதிவினை உறுதி செய்யும் எந்திரத்தை மறைக்க பயன்படுத்தக்கூடிய அட்டைகள், அதனை சீல் வைக்க பயன்படுத்தப்படும் துணிகள், மெழுகுவர்த்திகள், ஓட்டு போடும் வாக்காளர்களுக்கு கையில் வைக்கப்படும் அடையாள மை உள்ளிட்ட பொருட்கள் பெரம்பலூர் தொகுதிக்கு தாசில்தார் அலுவலகத்துக்கும், குன்னம் தொகுதிக்கு அங்குள்ள தாசில்தார் அலுவலகத்துக்கும் தேர்தல் ஆணையத்தால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
அந்த பொருட்களை பிரிக்கும் பணியில் கடந்த ஒரு வாரமாக அலுவலர்கள் ஈடுபட்டிருந்தனர். தற்போது அந்த பொருட்கள் வாக்குச்சாவடியில் பயன்படுத்தும் வகையில் தனித்தனியாக பையில் போடப்பட்டு, தயார் ெசய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளன்று மேற்கண்ட பொருட்களும் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.

Next Story