வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு


வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு
x
தினத்தந்தி 7 April 2021 2:15 PM GMT (Updated: 7 April 2021 2:15 PM GMT)

திண்டுக்கல்லில் வாக்கு எண்ணும் மையத்தில் துணை ராணுவ வீரர்கள் உள்பட 226 பேர் நியமிக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திண்டுக்கல்:

வாக்கு எண்ணும் மையம் 

திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளில், 2 ஆயிரத்து 673 வாக்குச்சாவடிகளில் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 77 சதவீதம் பேர் வாக்களித்தனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடைபெற்றது.

இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள், வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டன. மேலும் மண்டல வாரியாக அமைக்கப்பட்ட குழுவினர் வாக்குப்பதிவு எந்திரங்களை சேகரித்து எடுத்து வந்தனர். அவை அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான திண்டுக்கல் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டன.

3 அடுக்கு பாதுகாப்பு 

இதைத் தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் விஜயலட்சுமி, போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா மற்றும் தேர்தல் பார்வையாளர்கள், அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டன. 

பின்னர் அவை 7 தொகுதிகளுக்கும் உரிய தனித்தனி அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. அதோடு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன. 

மேலும் வாக்கு எண்ணும் மையத்துக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகள், அறைகளுக்கு செல்லும் பாதைகளில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

226 பேர் நியமனம் 

இதற்கு அடுத்தப்படியாக வாக்கு எண்ணும் மையத்தின் கட்டிடத்தின் உள்பகுதி முழுவதும் ஆயுதப்படை போலீசார், அதிவிரைவு போலீஸ் படையினர் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 

3-வது கட்டமாக வாக்கு எண்ணும் மையத்தின் வளாகம் முழுவதும் மற்றும் நுழைவு பகுதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ளூர் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.

இதன்மூலம் 56 துணை ராணுவ வீரர்கள், 11 அதிவிரைவு போலீஸ் படை வீரர்கள், ஆயுதப்படையினர், உள்ளூர் போலீசார் என மொத்தம் 226 பேர் வாக்கு எண்ணும் மையத்தின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

 இவர்கள் அனைவரும் சுழற்சி முறையில் ஒரு போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இதற்காக 2 போலீஸ் துணை சூப்பிரண்டுகளும், பாதுகாப்பு பணியை மேற்பார்வை செய்வதற்கு 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகளும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

கண்காணிப்பு கேமராக்கள் 

மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் அனைத்து பகுதிகளிலும் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் வெடிகுண்டு கண்டறியும் சோதனை நடத்தப்படுகிறது. இதற்காக பயிற்சி பெற்ற 5 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். 

இதுதவிர வாக்கு எண்ணும் மையத்தின் நுழைவுவாயில், கட்டிடத்தின் அனைத்து பகுதிகள், வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை, அவற்றுக்கு செல்லும் பாதைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

இந்த கண்காணிப்பு கேமராக்களில் மின்சாரம் தடைப்பட்டாலும் செயல்படும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை பார்த்து ஆய்வு செய்வதற்கு தனியாக ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு இருக்கிறது. 

அதற்கும் தனியாக போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை முடியும் வரை இந்த பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
-------

Next Story