வாழைத்தார் வரத்து குறைந்ததால் விலை உயர்வு


வாழைத்தார் வரத்து குறைந்ததால் விலை உயர்வு
x
தினத்தந்தி 7 April 2021 4:47 PM GMT (Updated: 7 April 2021 4:47 PM GMT)

பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு வாழைத்தார் வரத்து குறைந்ததால் விலை உயர்ந்தது.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு வாழைத்தார் வரத்து குறைந்ததால் விலை உயர்ந்தது. 

வாழைத்தார் ஏலம்

பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் புதன்கிழமை ஆகிய 2 நாட்கள் வாழைத்தார் ஏலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி புதன்கிழமை என்பதால் வாழைத்தார் ஏலம் நடைபெற்றது. 

சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் காரணமாக  ஏலத்திற்கு வாழைத்தார் வரத்து குறைந்து இருந்தது. இதனால் விலை அதிகரித்து காணப்பட்டது. அதிகபட்சமாக செவ்வாழை ரூ.1200 வரை ஏலம் போனது. 

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

வரத்து குறைவால் விலை உயர்வு

பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு ஆனைமலை, ஆலாங்கடவு, சமத்தூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வாழைத்தார் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றது. இதை தவிர தூத்துக்குடியில் இருந்து வாழைத்தார் வருகிறது. 

இந்த நிலையில் தேர்தல் காரணமாக விடுமுறை என்பதால், வெளியூர்களில் இருந்து கொண்டு வரப்படும் வாழைத்தார் வரவில்லை. 

பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மட்டும் வாழைத்தார் கொண்டு வரப்பட்டது. 

கடந்த வாரம் 1500 வரை வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த வாரம் 800 வாழைத்தார்கள் மட்டும் கொண்டு வரப்பட்டது. 

வரத்து குறைவு காரணமாக விலை அதிகரித்து காணப்பட்டது. செவ்வாழை ரூ.200 முதல் ரூ.1200, பூவந்தார் ரூ.200 முதல் ரூ.600, கற்பூரவள்ளி ரூ.150 முதல் ரூ.550, ரஸ்தாலி ரூ.150 முதல் ரூ-.600, நேந்திரம் கிலோவுக்கு ரூ.26, கதளி கிலோவுக்கு ரூ.28 வரை விலை போனது. 

கடந்த வாரத்தை விட ஒரு வாழைத்தாருக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை கூடுதலாக விலை உயர்ந்து இருந்தது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story