பெரியபாளையத்தில் 20 ஆண்டுகளுக்கு முந்தைய ராக்கெட் லாஞ்சர் கண்டெடுப்பு


பெரியபாளையத்தில் 20 ஆண்டுகளுக்கு முந்தைய ராக்கெட் லாஞ்சர் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 8 April 2021 1:42 AM GMT (Updated: 8 April 2021 1:42 AM GMT)

பெரியபாளையத்தில் 20 ஆண்டுகளுக்கு முந்தைய ராக்கெட் லாஞ்சர் கண்டெடுக்கப்பட்டது.

ராக்கெட் லாஞ்சர்

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அரசினர் மேம்படுத்தப்பட்ட ஆஸ்பத்திரி அருகே உள்ள மைதானத்தில் நேற்று சில வாலிபர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஏதோ ஒரு பொருள் அவர்களது கிரிக்கெட் மட்டையில் தட்டுப்பட்டது. இதனால் அந்த இடத்தை அந்த வாலிபர்கள் தோண்டி பார்த்தபோது ¾ அடி நீளம், ¼ அடி அகலம், 2½ கிலோ எடை கொண்ட ராக்கெட் லாஞ்சர் ஒன்றை கண்டெடுத்தனர்.

இது குறித்து பெரியபாளையம் போலீஸ் நிலையத்திற்கு அந்த வாலிபர்கள் தகவல் தெரிவித்தனர். ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி, பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தரணீஸ்வரி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மன் ஆகியோர் கொண்ட போலீஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

20 ஆண்டுகளுக்கு முந்தையது

வாலிபர்களால் கண்டெடுக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சரை ஆய்வு செய்தனர். அது சுமார் 20 ஆண்டுகளுக்கு முந்தையது என்பது தெரியவந்தது.ராக்கெட் லாஞ்சரை போலீசார் கைப்பற்றி கும்மிடிப்பூண்டியில் உள்ள பழைய ராணுவ தளவாடங்களை அழிக்கும் கம்பெனிக்கு அனுப்பி வைத்தனர்.

 


Next Story