கொரோனா தடுப்பு முறையை பின்பற்றாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை


கொரோனா தடுப்பு முறையை பின்பற்றாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை
x
தினத்தந்தி 8 April 2021 5:30 PM GMT (Updated: 8 April 2021 5:30 PM GMT)

கொரோனா வைரஸ் தடுப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்றாத தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை, 
கொரோனா வைரஸ் தடுப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்றாத தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவு
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
தமிழ்நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. 
தற்போதுள்ள நோய் பரவல் நிலையை கருத்தில் கொண்டு கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் பொது ஊரடங்கு உத்தரவிடப்பட்டுஉள்ளது.
கட்டுப்பாடுகள்
கோவிட் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக மத்திய, மாநில அரசால் ஒருங்கிணைந்து கீழ்க்கண்ட பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளன.
நோய் பரவலை கருத்தில் கொண்டு சிவகங்கை மாவட்டத்தில் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு 10.4.2021 முதல் 30.4.2021 நள்ளிரவு 12 மணி வரை தடை நீட்டிப்பு செய்யப்பட்டுஉள்ளது. மேலும் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கு அனைத்துத்தரப்பு மக்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் உணவு விடுதிகளில் பணிபுரியும் பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுவதையும், கை கழுவுவதையும் உபயோகப் படுத்துவதையும், முக கவசம் அணிவதையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி செய்து அனுமதிக்க வேண்டும். 
ஏற்பாடு
முக கவசங்கள் அணியாமல் இருப்பவர்களை கட்டாயமாக அனுமதிக்கக் கூடாது. தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மத்திய அரசு அவ்வப்போது வழங்கும் அறிவுரைகளுக்கு ஏற்ப தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை தொழிற்சாலை நிர்வாகம் செய்ய வேண்டும். இந்த நடைமுறைகளை முறையாக பின்பற்றாத தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் நபர்களை தொடர்ந்து கண்காணிக்க இ-பாஸ் முறை தொடர்ந்து செயல் படுத்தப்படும். 
மேற்கண்ட கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைபிடித்து வருவது குறித்து கண்காணிக்க கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்படும். மேலும் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இந்தப்பகுதிகளில் இருந்து வெளியில் வராதவகையில், காவல்துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்களைக் கொண்டு 24 மணிநேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்படும். 

Next Story