குடிநீர்கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீர்கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 8 April 2021 6:18 PM GMT (Updated: 8 April 2021 6:18 PM GMT)

லாலாபேட்டை அருகே குடிநீர்கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

லாலாபேட்டை
குழாயில் உடைப்பு
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் கம்மநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பொய்கைபுத்தூர் 9 வார்டு ஆதிதிராவிடர் காலனியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு காவிரியில் இருந்து குழாய் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பழைய குடிநீர் திட்டத்தினால் சரிவர தண்ணீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 
இதனை அடுத்து புதிதாக குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. தற்போது அந்த பணிகள் முடிவடைந்த நிலையில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. ஆனால் 2 இடங்களில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 1 மாதமாக குடிநீர் கிடைக்கவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றுதான் குழாயில் தண்ணீர் பிடித்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பொதுமக்கள் சாலைமறியல்
இதனால் ஆத்திரமடைந்த பொய்கைபுத்தூர் 9 வார்டு ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் லாலாபேட்டை அருகே உள்ள கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி, சாலை மறியலில் ஈடுபட்டனர். 
இதுகுறித்து தகவல் அறிந்த லாலாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், கம்மநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் இந்துமதி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போக்குவரத்து பாதிப்பு 
இதில், குழாயில் 2 இடங்களில் உடைப்பு ஏற்பட்டதை உடனடியாக சரிசெய்து குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டது. அப்போது, பொதுமக்கள் கூறுகையில், கம்மநல்லூர் ஊராட்சி பகுதி மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப பொய்கைபுத்தூர் பகுதியில் புதிதாக கிணறு அமைத்து பெரிய குழாய் மூலம் குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். பின்னர் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியால் கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.







Next Story