உரங்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை; அதிகாரி எச்சரிக்கை


உரங்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை; அதிகாரி எச்சரிக்கை
x
தினத்தந்தி 12 April 2021 8:08 PM GMT (Updated: 12 April 2021 8:08 PM GMT)

உரங்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி எச்சரித்துள்ளார்.

மங்களமேடு:
பெரம்பலூர் மாவட்டத்தில் 8,012 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பில் உள்ளது. இதில் யூரியா 1,576 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 472 மெட்ரிக் டன், பொட்டாஷ் உரம் 1,196 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் உரம் 4,344 மெட்ரிக் டன் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 424 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது. உர மூட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரங்களை உரிய ரசீதுடன், விவசாயிகளுக்கு ஆதார் எண்ணை பயன்படுத்தி விற்பனை முனைய கருவி மூலமே விற்பனை செய்ய வேண்டும். விற்பனை செய்தவுடன் இருப்பு விவரங்களை சரியாக பராமரிக்க வேண்டும். அதிக விலைக்கு உரங்களை விற்றாலோ, உரிய ஆவணங்கள் இன்றி உர விற்பனையில் ஈடுபட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உரம் இருப்பு மற்றும் விலை விவரங்கள் அடங்கிய தகவல் பலகை பராமரிக்கப்பட வேண்டும். அனுமதி பெறாத உரங்களை விவசாயிகளுக்கு விற்பனை செய்யக்கூடாது. 2020-21-ம் ஆண்டு விலையிலேயே தற்போதும் டி.ஏ.பி., பொட்டாஷ், சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும் என மத்திய உரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் உரக்கட்டுப்பாட்டு ஆணையின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெரம்பலூர் வேளாண் இணை இயக்குனர் கருணாநிதி தெரிவித்தார்.
மேலும், அதிக விலைக்கு உரங்களை விற்பனை செய்வது மற்றும் தரமற்ற உரங்கனை விற்பனை செய்வது பற்றி விவசாயிகளுக்கு தெரியவந்தால், பெரம்பலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனரை 9787061637, ஆலத்தூர் வட்டார வேளாண்மை அலுலரை 9786436433, வேப்பந்தட்டை வேளாண்மை அலுவலரை 9442746911, வேப்பூர் வேளாண்மை அலுவலரை 9361109874 மற்றும் வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) ராதாகிருஷ்ணனை 9487073705 என்ற செல்ேபான் எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்தார்.

Next Story