வேதாரண்யத்தில் பனிப்பொழிவால் முல்லைப்பூ சாகுபடி பாதிப்பு திருவிழாவுக்கு தடையால் பூ விலை வீழ்ச்சி


வேதாரண்யத்தில் பனிப்பொழிவால் முல்லைப்பூ சாகுபடி பாதிப்பு திருவிழாவுக்கு தடையால் பூ விலை வீழ்ச்சி
x
தினத்தந்தி 14 April 2021 3:13 PM GMT (Updated: 14 April 2021 3:13 PM GMT)

வேதாரண்யத்தில் பனிப்பொழிவால் முல்லைப்பூ சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக திருவிழாவிற்கு தடைவிதிக்கப்பட்டதால் பூ விைல வீழ்ச்சி அடைந்துள்ளது.

வேதாரண்யம், 

வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம், ஆயக்காரன்புலம், மருதூர், நெய்விளக்கு, பஞ்சநதிகுளம் உள்ளிட்ட 20 கிராமங்களில் 1,000 ஏக்கரில் முல்லைப்பூ சாகுபடி நடைபெறுகிறது. ஆண்டுதோறும் மார்ச் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை இந்த முல்லைப்பூ சீசன் காலமாகும். இந்த சீசன் காலத்தில் நாள் ஒன்றுக்கு 15 முதல் 20 டன் முல்லைப்பூ பட்டுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

தற்போது வேதாரண்யம் பகுதியில் கடும் பனிப்பொழிவால் பூச்செடிகள், இலைகள் உதிர்ந்து பூ விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 1 டன் முதல் 2 டன் வரை மட்டுமே முல்லைப்பூ வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

பூக்களின் விலை வீழ்ச்சி

சீசன் காலத்தில் கிலோ ரூ.50 முதல் ரூ.100 வரை கொள்முதல் செய்யப்படுகிறது.

சீசன் இல்லாத நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை கிலோ ரூ.1,000 வரை விற்பனை ஆகிறது. தற்போது கிலோ ரூ.700 முதல் ரூ.1000 வரை விற்பனையானது. பனிப் பொழிவால் முல்லைப்பூ அதிகம் விளையாததால் விலை உயர்ந்துள்ளது. ெகாரோனா பரவல் காரணமாக திருவிழாக்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக தீபாவளி, பொங்கல், ஆயுதபூஜை, வருடப்பிறப்பு ஆகிய நாட்களில் பூக்கள் அதிக விலைக்கு விற்கும். ஆனால் தற்போது திருவிழாக்களுக்கு அரசு தடை விதித்ததால் பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

விவசாயிகள் கவலை

இதனால் ஒரு கிலோ முல்லைப்பூ ரூ.300 முதல் ரூ.400 வரை விற்பனையாகிறது. திருவிழா காலங்களில் ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை விற்பனையாகும். பூ விளைச்சல் பாதிக்கப்பட்டதாலும், விலை வீழ்ச்சி அடைந்ததாலும் விவசாயிகள் கவலையில் உள்ளனர். எனவே முல்லைப்பூ விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் கடன் உதவியும், நிவாரணமும் வழங்க வேண்டும் என வேதாரண்யம் வணிகர் சங்க தலைவர் திருமலைசெந்தில் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story