உர விலை உயர்வை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் திருத்துறைப்பூண்டியில் நடந்தது


உர விலை உயர்வை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் திருத்துறைப்பூண்டியில் நடந்தது
x
தினத்தந்தி 15 April 2021 2:28 PM GMT (Updated: 15 April 2021 2:28 PM GMT)

திருத்துறைப்பூண்டியில், உர விலை உயர்வை கண்டித்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய சங்கம் சார்பில் உர விலை உயர்வைக் கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட பொருளாளர் சாமிநாதன் தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நகர செயலாளர் ஜெயபிரகாஷ், விவசாய தொழிலாளர் சங்கத்தின் நகர செயலாளர் தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் கலந்து கொண்டு பேசினார்.

விலை உயர்வை திரும்பப்பெற கோரிக்கை

மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதிபாசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் ரகுராமன், ஒன்றிய செயலாளர் காரல் மார்க்ஸ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

100 கிலோ மூட்டை டி.ஏ.பி. உரம் ரூ.1200-ல் இருந்து ரூ.1,900 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. காம்ப்ளக்ஸ் உரங்களின் விலை ரூ.90-ல் இருந்து ரூ.1800 வரை உயர்த்தப்பட்டுள்ளது எனவே உடனடியாக இந்த விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

Next Story