மூங்கில்துறைப்பட்டு பகுதியில் தண்ணீரைத் தேடி அலையும் வனவிலங்குகள்


மூங்கில்துறைப்பட்டு பகுதியில் தண்ணீரைத் தேடி அலையும் வனவிலங்குகள்
x
தினத்தந்தி 15 April 2021 5:26 PM GMT (Updated: 15 April 2021 5:26 PM GMT)

மூங்கில்துறைப்பட்டு பகுதியில் தண்ணீரைத் தேடி அலையும் வனவிலங்குகள்

மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தமிழக அரசுக்கு சொந்தமான காப்புக் காடுகள் மற்றும் மலைப் பகுதிகள் அதிக அளவில் உள்ளன. இங்கு மான், கரடி, முயல், காட்டெருமை, குரங்கு மற்றும் பல்வேறு வகையான பறவைகளும் அதிக அளவில் வசித்து வருகின்றன. தற்போது கோடை காலம் தொடங்கியதையடுத்து வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தண்ணீரை தேடி பொதுமக்கள் மட்டுமின்றி வனவிலங்குகளும் அலைந்து திரிந்து வருவதை காண முடிகிறது. மேலும் வனப்பகுதிகளில் குரங்குகள் அதிகளவில் வசித்து வருவதால் அவை தண்ணீரை தேடி கிராமப்புறங்களுக்கு வருவது மட்டுமல்லாமல் தண்ணீர் கிடைக்காமல் உயிர் இழந்து வரும் பரிதாப நிலையும் ஏற்படுகிறது. 

அந்த வகையில் ராவத்தநல்லூரில் உள்ள காப்புக் காடு மற்றும் மலைப்பகுதியில் வசித்து வரும் குரங்குகள் தண்ணீரைத் தேடி அருகில் உள்ள கிராமங்களுக்கு வருகிறது. கட்டிடத்தின் மேல் பகுதியில் திறந்த நிலையில் காணப்படும் குடிநீர் தொட்டிகளிலும், மாடியில் தேங்கி நிற்கும் தண்ணீரை குடித்து தாகத்தை தணித்து வருகின்றன. ஆனால் பெரும்பாலான கட்டிடங்களில் குடிநீர் தொட்டியின் மேல்பகுதி மூடி இருப்பதால் தண்ணீர் குடிக்க முடியாத நிலை ஏற்படும். எனவே கோடைகாலத்தை கருத்தில் கொண்டு வனவிலங்குகள் தண்ணீரை தேடி கிராமப்பகுதிக்கு வருவதை தடுக்க வனப்பகுதிகளில் ஆங்காங்கே தொட்டி அமைத்து தண்ணீரை தேக்கி வைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Next Story