கொள்முதல் செய்யப்படாததால் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம்


கொள்முதல் செய்யப்படாததால் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம்
x
தினத்தந்தி 15 April 2021 7:15 PM GMT (Updated: 15 April 2021 7:15 PM GMT)

நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படாமல் 10 ஆயிரம் நெல்மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன. கோடை மழையால் நெல் முளைவிடும் அபாயம் உள்ளது.

மங்களமேடு:

நெல் கொள்முதல் நிலையங்கள்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்தில் அகரம் சீகூர், ஒகளூர், மண்டபம், துங்கபுரம், காடூர் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் சம்பா பட்டத்தில் சாகுபடி செய்த நெல் கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. அங்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 20 நாட்களாக அந்த கொள்முதல் நிலையங்களில் முறையாக நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. அதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு, காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் நெல் மூட்டைகளுடன் வெயில், சாரல் மழையில் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கோரிக்கை
மேலும் அவ்வப்போது பெய்யும் கோடை மழையில் நெல் மூட்டைகள் நனையாமல் இருக்க தார்ப்பாய் கொண்டு மூடி வைக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். தற்போது வரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் தேக்கம் அடைந்து உள்ளது. கோடை மழையில் நனைந்தால் நெல் முளைவிடும் அபாயம் உள்ளது. எனவே கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story